கடந்த 1994 முதல் 2020ம் ஆண்டு வரை நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார் என்றுதான் தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.
25 ஆண்டுகளாக மக்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், திடீரென நான் அரசியலுக்கு வருவது உறுதி என 2020ம் ஆண்டில் ரஜினி அறிவித்தார்.
ஆனால் அதற்கு பிறகு தமிழ்நாட்டில் ஏதேனும் புரட்சி நடந்தால் நான் அரசியலுக்கு வருகிறேன். என் உடல் நலம் சரியில்லை. அதிமுக திமுக என்ற பெரிய கட்சிகள் களத்தில் இருப்பதால் அவர்களுடன் ரசிகர்களின் செல்வாக்கை மட்டுமே நம்பி நான் களத்தில் இறங்கி என் ரசிகர்களை பலிகடா ஆக்க நான் தயாராக இல்லை என்றும் கூறிவிட்டு பின்வாங்கி விட்டார்.
எனினும் அவ்வப்போது அவரிடம் செய்தியாளர்கள் அரசியல் நிலவரம் குறித்தும் அரசியல்வாதிகளின் கருத்துகள் குறித்தும் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு நோ கமெண்ட்ஸ் என்று சொல்லிவிட்டு ரஜினிகாந்த் நகர்ந்து விடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் கடந்த 5 ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பது மட்டுமே ரஜினியின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் சூடு பிடித்துள்ள இந்த சூழலில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக இருந்து வருகின்றன. அரசியல் தேர்தல் களம் அனலாய் கொதித்து வருகிறது. ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்த நிலையில், சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.
அப்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் தான் வெளியிடுவார்கள் என்று ரஜினிகாந்த் கூறினார். மேலும் கமலுடன் நடிக்க இருக்கும் படத்தின் சூட்டிங் வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் கூறினார்.
அப்போது ரஜினியிடம், தேர்தல் ஓட்டுப்பதிவு தேதி நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் எதுவும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே கையெடுத்து கும்பிட்டார். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு போவீங்களா என்ற கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என சிரித்தபடி சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து வேகமாக நகர்ந்து சென்று விட்டார்.

