Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

'3 முறை முதல்வர்' ஓ.பன்னீர்செல்வம், 'குடும்பக் கட்சி' திமுக.,வில் இணைந்தார்!

மிழகத்தில் 3 முறை முதல் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தற்போதைய முதல் அமைச்சர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினை சந்தித்து திமுக.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம், மீண்டும் அதிமுக.,வில் எப்படியாவது இணையலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். இதற்காக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்பதைத் தொடங்கி அதை பெயரளவுக்கு நடத்தி வந்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு சில காலமே உள்ள நிலையில், குறிப்பாக தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இத்தகைய முடிவை எடுத்துள்ளார். அதே நேரம், அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்ட எவரையும் அதிமுக.,வில் சேர்க்க மாட்டேன் என்று உறுதியுடன் இருந்துவந்த எடப்பாடி பழனிசாமி, ஒரு கட்டத்தில் டிடிவி தினகரனின் அமமுக.,வை, அதிமுக.,இடம்பெறும் தேஜ.,கூட்டணியில் இணைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார். எனினும் நேரடியாக எவரையும் அதிமுக.,வில் சேர்க்க முன்வரவில்லை.

பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் எம்எல்ஏ.,க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்ட சிலர் திமுக.,வில் இணைந்தனர். கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர் போன்றோர் தவெக.,வுக்குத் தாவினர். தர்மர் எம்.பி., மீண்டும் அதிமுக., பக்கமே சென்று எடப்பாடியுடன் இணைந்துவிட்டார். பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சியைத் தொடங்கி விட்டார். சசிகலா புதிய கட்சி தொடங்க முனைப்பு காட்டி வருகிறார்.

இந்நிலையில் தனிமரமாக அரசியலில் ஆதரவற்ற நிலையில் தனித்துவிடப்பட்ட பன்னீர்செல்வம், மீண்டும் அதிமுக.,வில் தன்னை இணைக்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததை உணர்ந்து, அடுத்தகட்ட முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால், அவர் திமுக.,வில் சேர இருப்பதாக தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. குறிப்பாக, திமுக., தலைவர் ஸ்டாலினை அடிக்கடி சந்தித்தார். எனவே அவர் திமுக.,வில் இணைவது உறுதி என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அவருடன் ஒரே காரில் அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றனர். அங்கே அமைச்சர்கள் கேஎன் நேரு, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி உள்ளிட்ட திமுக.,வினர், தொனடர்கள் அவரை வரவேற்றனர். பின்னர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக., உறுப்பினருக்கான படிவத்தில் கையெழுத்திட்ட ஓ.பன்னீர்செல்வம், தன்னை திமுக.,வில் இணைத்துக் கொண்டார்.

பன்னீர்செல்வத்துடன், அவரது மகனும், முன்னாள் எம்பி.,யுமான ரவிந்திரநாத் மற்றும் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்டோரும் திமுக.,வில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து, தேனி போடிநாயக்கனூர் தொகுதி எம்எல்ஏ பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். சட்டப்பேரவைச் செயலரை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக சார்பில் தேனி தொகுதியில் அவர் போட்டியிட முயற்சி செய்வார் என்று கூறப்படுகிறது.

வரவேற்று ஸ்டாலின் பதிவு:

ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவு;

முன்னாள் முதல்வரும், அருமைச் சகோதரருமான ஓ.பன்னீர்செல்வம் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன். திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார். 2026 சட்டசபை தேர்தல் என்பது தமிழகத்திற்கும், பாசிச பாஜவுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கட்சி கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!

அழிவுகாலம் நெருங்கிவிட்டது

சசிகலா வெளியிட்ட அறிக்கை

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக மூத்த முன்னோடியுமான ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில், தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது. ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து அதிமுகவில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது. இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் எனது தலைமையில் எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்களும், ஜெயலலிதாவின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி.

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். 'மதிமுக என்பதற்கு அர்த்தம் 'மறுபடியும் திமுக' என்பதுதான்'
இப்ப…
அதிமுகவுக்கு அர்த்தம் 'அவங்களும் திமுகதான்'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari