Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பாராலிம்பிக்: பெரும் முன்னேற்றம் கண்ட  இந்திய அணி!

பாராலிம்பிக்: பெரும் முன்னேற்றம் கண்ட இந்திய அணி!

#image_title

பாரீஸில் நடைபெற்ற 2024ம் ஆண்டுக்கான பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய அணியினர் மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

கடந்த பாராலிம்பிக் போட்டிகளை விட அதிக அளவில் 7 தங்கம் உட்பட 29 பதக்கங்களைப் பெற்று, 20 நாடுகளைக் கொண்ட முதல் பட்டியலிலும் இடம்பிடித்து முதல்முறையாக சாதித்துள்ளனர். அவர்களுக்கு நாடு முழுதும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28ல் தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. இதில் 168 நாடுகளைச் சேர்ந்த 4,400 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றார்கள். இந்தியத் தரப்பில் இருந்து 84 பேர், 12 வகையான போட்டிகளில் பங்கேற்றார்கள்.

இந்தப் போட்டிகளில் பங்கேற்று, தடகளம், பாட்மின்டன், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, ஜூடோ என 5 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, மொத்தம் 29 பதக்கங்களைப் பெற்றார்கள். இவற்றில், தடகளத்தில் மட்டும் 17 பதக்கங்கள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிஸில் அண்மையில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் வெறும் 6 பதக்கங்களையே பெற்று ஏமாற்றம் அடைந்த இந்திய அணியினர், பட்டியல்ல் 71வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதற்கு ஆறுதல் அளிப்பது போல், பாராலிம்பிக் போட்டிகளில் அசத்தி, இந்திய அணியினர் 18வது இடத்தைப் பிடித்தனர். 'டாப்-20' பட்டியலில் இடம் பெற்றதன் மூலம் இந்திய அணியினர் தாங்களும் சாதனையாளர்களே என்று இனம் காட்டினர். கடந்த 2016ல் நடைபெற்ற ரியோ பாராலிம்பிக்கில் 4 பதக்கம், 2021ல் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் 19 பதக்கம் என முன்னேற்றம் கண்டு, இப்போது 29 பதக்கங்கள் என நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இந்த பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல புதிய சாதனைகளையும் படைத்தனர். தடகளத்தில் பிரீத்தி பால் (100, 200 மீ., ஓட்டம்), உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் ஆகியோர் வெண்கல பதக்கங்களைப் பெற்றனர். இவர்களில் மாரியப்பன் தொடர்ந்து மூன்று பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். ஹர்விந்தர் சிங் (வில்வித்தை), தரம்பிர் (கிளப் த்ரோ), ஷீத்தல் தேவி (வில்வித்தை), சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), அவனி (துப்பாக்கி சுடுதல்), கபில் பார்மர் (ஜூடோ) ஆகியோர் பதக்கங்களை வென்று சாதித்தனர்.

ALSO READ:சொதப்பல் பேட்டிங்... சொந்த மண்ணில் என்ன ஆச்சு இந்திய அணிக்கு?!

பாராலிம்பிக்கில் 1968 முதல் 2021 வரை இந்தியா (9 தங்கம், 12 வெள்ளி, 10 வெண்கலம்) மொத்தம் 31 பதக்கம் வென்றது. இம்முறை பாரிசில் மட்டும் 29 பதக்கங்கள் கிடைத்தன. பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு தடகளத்தில் 4 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 17 பதக்கங்களும், பாட்மின்டனில் 5, துப்பாக்கி சுடுதலில் 4, வில்வித்தையில் 2, ஜூடோவில் ஒரு பதக்கம் என மொத்தம் 29 பதக்கங்கள் கிடைத்தன.

இந்நிலையில் 12 நாட்கள் நடைபெற்ற பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நிறைவுற்றூ, நேற்று இதன் நிறைவு விழா நடைபெற்றது. பாரிசில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிறைவு விழாவில் வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பில் இந்திய மூவர்ணக்கொடியை ஹர்விந்தர் சிங், பிரீத்தி பால் ஏந்தி வந்தார்கள். கண்கவர் நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே முடிந்தது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari