ஹைதராபாத்தில் வசிக்கும் டாக்டர் ப்ரொபசர் முதிகொண்ட சிவபிரசாத் அவர்கள், 'சாரித்ரிக நாவலா சக்கரவர்த்தி' என்ற விருது பெற்றவர்.
இவர் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியாகப் பணிபுரிந்து பதவி ஓய்வு பெற்றவர். இவருக்கு எண்பத்து நான்கு வயதாகிறது. இதுவரை நூற்று நாற்பத்திரண்டு சரித்திர நாவல்கள் எழுதியுள்ளார். இன்னும் எழுதுகிறார். ஒரே நேரத்தில் மூன்று பேருக்கு வெவ்வேறு தலைப்புகளில் டிக்டேஷன் செய்து எழுதச் செய்யும் ஆற்றல் கொண்டவர். அது தவிர மிகப் பல ஆண்டுகளாக தினமும் காலை நான்கு மணிக்கே எழுந்து குறைந்தது இரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் எழுதும் பழக்கம் கொண்டவர். தற்போது சிறிது கண்பார்வை குறைந்திருந்தாலும், இன்று வரை அந்த வழக்கத்தைத் தொடர்வதாகக் கூறுகிறார்.
ப்ரொபசர் முதிகொண்ட சிவபிரசாத் அவர்களின் சில கட்டுரைகளை நான் தமிழில் மொழிபெயர்த்தேன். அவை நம் தினசரி தளத்தில் வெளிவந்து பலருக்கும் உபயோகமாக இருந்தது. அண்மையில் அயோத்தி ராமர் கோவில் அமைக்க, சுதந்திர பாரதத்தில் நடந்த போராட்டங்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரையை மொழிபெயர்த்தேன். தினசரி தளத்தில் வெளிவந்த அந்த கட்டுரையையும் அதற்கும் முன் வெளிவந்த அவருடைய கட்டுரைகளையும் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு, அவரைச் சென்று பார்த்து வந்தோம்.
அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் கூறிய ஆர்வம் மிகுந்த கருத்துகளை அவருடைய அனுமதியோடு பதிவு செய்தேன். அதையே இந்த கட்டுரையில் தமிழில் தருகிறேன்.
'தமிழ்நாடு மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த மாநிலம். ஆன்மீகச் செழிப்பு நிரம்பிய மாநிலம். ஏனென்றால் ஒரே காலத்தில் உலகப் புகழ்பெற்ற உயர்ந்த மகான்களின் அவதாரம் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது. அது தமிழ்நாட்டிற்குக் கிடைத்த அற்புதமான வரம்.
மகான்கள் அவதரித்த மாநிலம் -
ALSO READ:திருவோணம், புரட்டாசி மாத பூஜை... செப்.13ல் சபரிமலை நடை திறப்பு!
அவர்களுள் ஒருவர் கும்பகோணம் சுவாமி. அவரை மாஸ்டர் ஸி.வி.வி. என்று அழைப்பார்கள். இவர் வாழ்ந்து வந்த காலத்திலேயே காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ. சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாசுவாமியும் வாழ்ந்து வந்தார். அவரை 'நடமாடும் தெய்வம்' என்று போற்றுகிறோம். அடுத்து ஸ்ரீ அரவிந்தர். அரவிந்தர் பூரணயோகத்தை நமக்கு அளித்தார். அடுத்து, மகான் ஸ்ரீ ரமண மகர்ஷி. இவ்விதம் ஒரே காலத்தில் நான்கு மகாத்மாக்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தது ஆச்சர்யத்தை அளிக்கிறது. இது தமிழ்நாடு செய்த புண்ணியம் எனபதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஸ்ரீ அரவிந்தரின் சித்தாந்தம் அமிர்தத்தைப் போன்றது. நான் அதனை நன்றாகப் படித்துப் பயின்றுள்ளேன். பாண்டிச்சேரிக்குப் பலமுறை சென்று வந்துள்ளேன். அடுத்து, திருவண்ணாமலை. துரதிருஷ்டவசமாக ஸ்ரீரமண மகரிஷியை அவர் தேகத்தோடு வாழ்ந்த காலத்தில் தரிசிக்க முடியவில்லை. ஆனால் ஸ்ரீ ரமணாஸ்ரமத்தோடு எனக்கு நல்ல பழக்கம் உள்ளது.
தமிழ்நாட்டில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் பிறந்தார்கள். திருக்குறளை இயற்றிய மகான் திருவள்ளுவர் பிறந்தார். நாம் பாராயணம் செய்யும் திருப்பாவை பாசுரங்களை இயற்றிய ஆண்டாள் நாச்சியார் அவதரித்தார். திருவெம்பாவை இயற்றிய மாணிக்கவாசகர் அவதரித்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த அவ்வையார் அருளிய செய்யுட்கள் நமக்கு இன்றும் கிடைக்கின்றன. இன்னும் பலப்பல ஆன்மீக இலக்கியங்களை அருளிச் செய்த மகான்கள் அவதரித்த தலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
ALSO READ:சோழவந்தான்: ஆயுத பூஜை போல கொண்டாடப்பட்ட விஸ்வகர்ம விழா!
இவ்விதம் தமிழ்நாடு ஆன்மீகத்திலும் இலக்கியத்திலும் செழுமை நிறைந்த மாநிலமாகத் திகழ்கிறது. அதனால் என் மதிப்பில் தமிழ்நாடு வெறும் சுற்றுலாத் தலம் மட்டுமல்ல. உயர்ந்த தீர்த்த யாத்திரைத் தலமும் கூட. நான் அந்த சிறந்த ஆன்மீக பூமியை தலை வணங்கி சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.
இன்னுமொரு செய்தி. நம் பாரதத் தாய்நாடு கன்யாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை விரிந்து பரந்துள்ளது. இதில் எந்த ஒரு இடத்தையும் ஃபெடரலிசம் என்ற பெயரால் பிரிப்பதற்கு இடமில்லை. உடலில் இருந்து கால்களையும் கைகளையும் பிரிப்பதற்கு இடமில்லை அல்லவா? அனைத்தும் ஒன்றாக இணைந்திருந்தால்தானே மனித உடல் என்று ஆகிறது? அதே போல் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை உள்ள தேசம் எல்லாம் சேர்ந்தால்தான் அகண்ட பராத தேசமாகும். இது போன்ற பாரத உணர்வும் தேச பக்தியும் உடையவரே பாரத தேசக் குடிமகன்.
சனாதனம் -
'சனாதனம்' என்ற சொல்லுக்கான பொருளை ஒரு முறை பார்ப்போம். சனாதனம் என்றால் புராதனம் என்று கூறுகிறார்கள். அது தவறல்ல என்றாலும் சனாதனம் என்றால் 'எடர்னல்'. சாஸ்வதமானது என்று பொருள். சூரியன் கிழக்கே உதிக்கிறான். இது ஒரு 'எடர்னல்' சத்தியம். மா விதை நட்டால் மா மரம் முளைக்கும். இது என்றுமுள்ள உலகளாவிய உண்மை. இதனை நாம் மாற்ற முடியாது. 'சனாதனம்' நேற்று, இன்று, நாளை, மூன்று காலங்களிலும் நித்தியமானது, நிலையானது. முக்காலங்களுக்கும் உரியது. சனாதனம் என்பது அனைத்துலும் வியாபித்துள்ள சத்தியம். நம் பண்டைய ரிஷிகளின் சிந்தனை முறை அது. சனாதனம் என்பது வேதங்களும் உபனிஷத்துகளும் நமக்கு அளித்த உயர்ந்த தர்மம்.
ALSO READ:ஆடி அமாவாசை; வைகைக் கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
ஆனால் குறுகிய மனப்பான்மை கொண்ட சிலரால் நேர்ந்த சில தீய வழக்கங்களையும் சிறு தவறுகளையும் சனாதன தர்மத்தின் மீது சுமத்துவது கூடாது. இவை இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ள வேண்டும். இந்த சிறு கருத்தை உங்களோடு பகிந்து கொண்டது குறித்து நான் மகிழ்கிறேன். வணக்கம்'.
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் 'ஏஷ தர்மஹ சனாதனஹ' என்ற தெலுங்கு நூலை 'இது நம் சமாதன தர்மம்' என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.See Full Bio

