Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

மலர்வளையம் வைப்பவர்கள். சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

தொகுதி மறு வரையறை

543 தொகுதிகளாக இருப்பது 850 சொச்ச தொகுதிகளாக அதிகரிக்கப்படவிருக்கிறது. மக்கள் தொகை அதிகரித்திருப்பதால் கூடுதல் எம்பிகள் தேர்வானால்தான் நிர்வாகம் செய்ய எளிதாக இருக்கும் என்ற எளிய கணக்குதான்.

ஒரு பள்ளியில் ஆயிரம் மாணவர்கள் இருந்தபோது 50 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இரண்டாயிரம் மாணவர்கள் சேர்ந்துவிட்டால் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்தான் நல்லது. இந்த அடிப்படையில்தான் இந்த மறு வரை செய்யப்படவிருக்கிறது. இதை அனைத்து மாநிலப் பிரதிநிதிகளும் நிபுணர்களும் அதிகாரிகளும் சேர்ந்துதான் தீர்மானிக்கப் போகிறார்கள்.

எதிர்க்கட்சிகளென்றால் எல்லாவற்றையும் எதிர்க்கும் கட்சிகள் என்பதால் இதையும் எதிர்க்கின்றன.

இந்த மறுவரையினால் எந்தவொரு மாநிலத்தின் நாடாளுமன்றச் செல்வாக்கும் எந்த பாதிப்புக்கும் ஆளாகாது. அதாவது இத்தனை ஆண்டுகாலம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் (மாநில மக்களுக்கும்) என்னவிதமான பிரதிநிதித்துவம் இருந்திருக்கிறதோ அது அப்படியே தொடரப்போகிறது.

500 ரூபாய் சம்பளம் வாங்குபவருக்கு பத்து சதவிகித உயர்வாக 550 ரூபாய் கிடைக்கும். ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவருக்கு அதே 10% உயர்வாக 1,100 ரூபாய் கிடைக்கும். இரண்டுபேருக்கும் சதவிகிதக் கணக்கில் ஒரே சம்பள உயர்வுதான். ஆனால் முதலாமவருக்கு ரூ 50 மட்டுமே அதிகரிக்கும். இரண்டாமவருக்கு ரூ 100 அதிகரிக்கும்.

முரசொலியான்களுக்கு இந்த ஒன்றே போதும்; தமக்கு துரோகம் இழைக்கப்பட்டுவிட்டதாக நம்பி நடுத்தெருவில் உருளத் தொடங்கிவிடுவார்கள்.

யுனெஸ்கோ வளாகத்தில் இருக்கும் வாடகை அரங்கில் நடைபெற்ற விருந்தில் கிடைத்த விருதை உண்மையிலேயே யுனெஸ்கோ விருதாக நம்பும் கூட்டம் அது.

ALSO READ:நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

அவர்கள் இப்படிப் பேசாவிட்டால்தான் ஆச்சரியப்படவேண்டும்.

இந்த மறுவரைவு நடவடிக்கை எடுக்க இது தோதாத காலமா..? தேர்தல் நேரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இதைப் பயன்படுத்துவார்களே.

இப்படியெல்லாம் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. எதிர்ப்பவர்களுக்கு இது இல்லையென்றால் இன்னொன்று.

எனவே, நாமே வாகான ஆயுதத்தை எடுத்துக் கொடுக்கவேண்டுமா என்ற கேள்வி தவறு.

உண்மையில் பாஜக பக்கம் நியாயம் இருக்கும் விஷயத்தை எதிரிகளின் பேசுபொருளாக்கியதென்பது பாஜகவின் சரியான தந்திரம் என்றே சொல்லவேண்டும்.

மக்கள் மீது நம்பிக்கை வைத்து பாஜக செய்யும் சாகச விளையாட்டு.

உண்மையில் மக்கள் எதிர்க் கட்சியினரின் ஊடக அராஜகம், மிகை பயத்தை உருவாக்குதல், அவதூறு செய்தல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள இன்னொரு வாய்ப்பை முன்வைக்கிறது.

டிமானிடைசேஷனில் நம் பணமெல்லாம் பறிபோய்விடும் என்று பயம் காட்டினார்கள்.
பறிபோகவில்லை.

கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் தமிழகம் அழிந்துவிடும் என்றார்கள்.
அழியவில்லை.

ரேஷன்கடைகள் எல்லாம் மூடப்படும் என்றார்கள்.
மூடப்படவில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தால் முஸ்லீம்களை விரட்டிவிடுவார்கள் என்றார்கள்.
அப்படி நடக்கவில்லை.

ஹிந்தி வந்து தமிழை அழித்துவிடும் என்றார்கள்.
அப்படி நடக்கவில்லை.

பண்ணையார்களின் பயிர் கடனை ரத்து செய்யச் சொல்லி கோவணப் போராட்டம் நடத்தி தமிழர்களை அவமானப்படுத்தினார்கள்.
நீட் வந்தால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரமுடியாது என்றார்கள்.
உண்மையில் அது வந்த பின்னர்தான் சேர முடிந்திருந்திருக்கிறது. அனிதா உண்மையில் திமுக பக்கம் போகாமல் இருந்திருந்தால் அடுத்த முறை தேர்வு எழுதி இன்று டாக்டராகியிருப்பார்.

ALSO READ:தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

பாஜக தமிழர்களை வஞ்சிக்கிறது என்கிறார்கள். உண்மையில் ஈழப் பிரச்னையில் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள் திமுகவும் காங்கிரஸும்தான்.

சாராயக்கடைகளை மூடமுடியாது. ஆனால் அரசு அதை நடத்தாமல் இருக்கலாம். பிஹாரில் பூரண மது விலக்கு அமலில் இருக்கிறது.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க பாஜக விடவில்லை என்கிறார்கள். உண்மையில் அது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயமே.

ஜி.எஸ்.டி. வரியில் தமிழகத்துக்கான நிதி தருவதில்லை என்கிறார்கள். 50% முழுமையாக தமிழகத்துக்கு மத்திய கவுன்சிலிடம் போகாமலேயே கிடைத்துவிடுகிறது. எஞ்சிய 50%லும் கணிசமான தொகை கிடைத்துவிடுகிறது.

கல்வி நிதியை முடக்குகிறார்கள் என்று சொல்கிறார்கள்.
பொதுவான கல்வித் திட்டங்களுக்கான மத்திய அரசின் தொகையில் ஒரு நயா பைசா முடக்கப்படவில்லை.

புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அதில் சேரும் மாநிலங்களுக்கு அந்த நிதி. சேராத மாநிலங்களுக்கு அந்த நிதி இல்லை. முத்ரா கடனுதவி என்பது விவசாயம் சாரா சிறு/குறு தொழில் தொடங்க முன்வருபவர்களுக்குத் தரப்படும். அதை விவசாயிகளுக்குச் செய்யப்படும் அநீதி என்று சொல்லமுடியுமா? அவர்களுக்கு வேறு திட்டங்களில் கடனுதவிகள் தரப்படும். அதுபோல் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேராத மாநிலங்களுக்கு அந்த நிதி மட்டும் கிடையாது. இதில் தமிழகம் வஞ்சிக்கப்படவில்லை.

இந்த உண்மைகள் அனைத்துமே மக்களுக்குத் தெரியும்.

தெரிந்தபின்னும் புரிந்துகொள்ளவில்லையென்றால் தொகுதி மறுவரையை இப்போது கொண்டுவந்தாலும் அப்பறம் கொண்டுவந்தாலும் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை.

இவை எல்லாவற்றையும் விடுங்கள்.

இந்துக்களின் ஆன்மிக நம்பிக்கைகள், மரபுகள், விழாக்கள், வாழ்வாதாரம் அனைத்தையும் இழித்தும் பழித்தும் அழித்தும் வருகிறார்கள். ஒரு கிறிஸ்தவ விழாவையோ முஸ்லிம் நம்பிக்கையையோ இப்படி எதுவும் பேசுவதும் இல்லை.

இவையெல்லாம் மக்களுக்கு ஒருவர் வந்து சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?

திமுக கூட்டணியின் இந்து விரோதம், ஊழல்கள், கம்யூனிஸ்களின் கார்ப்பரேட் எடுபிடித்தனம், தலித் கட்சிகளின் அடிமைத்தனம், கிறிஸ்தவ-இஸ்லாமிய சக்திகளின் வல்லாதிக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, நிர்வாகத் திறனற்ற ஆட்சி எல்லாமே மக்களுக்குத் தெரியும்.

இருந்தும் இந்து நலன் இரண்டாம்பட்சமாக இருப்பதன் காரணம், இந்துக்களுக்கு அரசியல் உணர்வு இல்லை. கிறிஸ்தவ இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது. அதாவது கிறிஸ்தவ இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு தமது மதத்தினர் மீது சர்வாதிகாரக் கட்டுப்பாடு இருக்கிறது. இந்துத்துவர்களுக்கு இல்லை. அதனால் இந்து அரசியல் கட்சிகளுக்கும் இல்லை.

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari