ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலின் பிரமோத்ஸவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் வடபத்ரசாயி பெருமாளுக்கு புரட்டாசி மாதமும், ஆண்டாள் நாச்சியாருக்கு ஆடி மாதமும், ஆண்டாள் நாச்சியாரின் திருத்தந்தையார் பெரியாழ்வாருக்கு ஆனி மாதமும் பிரம்மோத்ஸவங்கள் நடைபெறுகின்றன.
அடுத்து, ஆண்டாள் நாச்சியார் - ஸ்ரீரெங்கநாதர் திருமண வைபவம் பங்குனி மாதம் பத்து நாட்கள் நடைபெறுகிறது.
இப்படி ஆண்டுக்கு நான்கு பிரம்மோத்ஸவங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில்
நடைபெறுகின்றன. ஆடிப்பூரம் விழாவில் பெரிய தேரும், மற்ற மூன்று திருவிழாக்களில் செப்புத் தேரோட்டமும் நடைபெறும்.
வடபத்ரசாயி பெருமாளுக்கான பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. தினமும் இரு வேளையும் வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. வரும் 8-ம் தேதி இரவு கருடசேவை நடைபெறும்.
அப்போது பெருமாள் கருட வாகனத்திலும், ஸ்ரீ பெரியாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருள்வர்.
9-ம் தேதி மதியம் 3 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. புரட்டாசி திருவோணம் நாளான 12-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
ALSO READ:Ind Vs Ban Test: சேப்பாக்கத்தில் கில், பந்த், அஷ்வினின் அசத்தல் ஆட்டம்!
13-ம் தேதி சப்தாவர்ணம், இரவில் வெட்டிவேர் சப்பரத்தில் பவனியுடன் விழா நிறைவு பெறுகிறது.
Sakthi Paramasivan.k
Media News Reporter, RajapalayamSee Full Bio

