Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

✍️ ஜி.எஸ். பாலமுருகன்

  • செய்திக்கதிர்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது.

நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில் ம.தி.மு.க. போன்ற கட்சிகள் என்ன செய்யும்?

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி (தனி) ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆரம்ப ஒப்பந்தத்தின் படி 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாக வைகோ அறிவித்திருப்பது 'சரணாகதி ஒப்பந்தம் போல பார்க்கப்படுகிறது.'

1996-ல் தனி அணியாக 177 இடங்களில் தேர்தல் களம் கண்ட ம.தி.மு.க., படிப்படியாக பெரிய வெற்றி வாகையின்றி, இன்று 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலைக்கு வந்துள்ளது.

கட்சியின் அடையாளமாக இருந்த பம்பரம் சின்னம் அரசியல் விளையாட்டில் உடைந்து, இன்று உதயசூரியனில் நிற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

வைகோவின் முடிவை கூட்டணித் தந்திரமாகவும், வாக்கு ஒருங்கிணைப்புக்கான அவசியமான நடவடிக்கையாகவும் சமாதானப்படுத்திக் கொள்ளலாம். 'பா.ஜ.க. உள்ளே வந்துரும்; அதனால் தான் இந்த முடிவு' என்று நாளை வைகோ சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் ஒரு கட்சியின் சின்னம் என்பது வெறும் தேர்தல் குறியீடு அல்ல; அது அதன் அரசியல் இருப்பின் அடையாளம். இது கூட்டணியா, அல்லது அரசியல் சரணடைதலா? என்ற ஆழமான கேள்வியை எழுப்புகிறது.

வாரிசு அரசியல் எதிர்ப்பால் தி.மு.க.வில் இருந்து பிரிந்து ம.தி.மு.க.வை தொடங்கியபோது வைகோவிடம் இருந்த தனித்துவ அரசியல், தீவிர தமிழர் உணர்வு, அனல் தெறிக்கும் பேச்சு, சூழலியல் சார்ந்த தீவிர நிலைப்பாடுகள் கட்சிக்கு தனித்துவ முகவரியை உருவாக்கின.

கருணாநிதி குறித்து முன்பு கடுமையான விமர்சன நிலைப்பாடு எடுத்திருந்த நிலையில், இன்று அவரது அரசியல் மரபின் முன் சென்று ஒத்துழைப்புக் கோணத்தில் செயல்படும் நிலையும், ஸ்டாலின் தலைமையின் கீழ் செயல்படும் நிலையும் வைகோவின் அரசியல் நெறி மீது இருந்த மதிப்பு பொதுமக்கள் மத்தியில் சரிந்துவிட்டது.

தி.மு.க., அ.தி.மு.க. என மாறி மாறி கூட்டணி அமைத்த தேர்தல் அரசியல் முடிவுகளே ம.தி.மு.க.வின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணமாகும். ஒரு கட்டத்தில் ம.தி.மு.க. என்றாலே 'பேரம் (அரசியல் லாபம் அல்லது ஆதாயம் பெறும் நோக்கில் நடைபெறும் ஒப்பந்த அரசியல்) என்ற விமர்சனம்' உருவாகியுள்ளது.

'வாரிசு அரசியல்' என்று எதிர்த்த நிலைப்பாடு இன்று குடும்ப அரசியல் முன்னுரிமை பெறும் நிலையில் மாறிவிட்டதாக விமர்சனங்கள் எழுகின்றன. கட்சிக்காக உழைத்தவர்களை பின்தள்ளியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ம.தி.மு.க.வின் உள் ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்குகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் கட்சி நடத்தி, மகனை அரசியலில் கொண்டு வந்து தி.மு.க. ஆதரவுடன் எம்.பி.யாக்கியுள்ளீர்கள்.

கூட்டணி அரசியலில் சமரசம் தவிர்க்க முடியாத அரசியல் நிஜம். ஆனால் அது அடையாளத்தையே பாதிக்கும் அளவுக்கு சென்றால் அதன் நீண்டகால அரசியல் பயணம் சந்தேகப்படுத்தப்படுகிறது. குறுகிய கால பலனுக்காக எடுக்கப்படும் முடிவுகள் தனித்துவப் பாதையை மங்கச் செய்யும் என்பதை வைகோ அறியாதவர் அல்ல.

தி.மு.க. கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் 'எங்களின் நிலை சிரித்துக்கொண்டே அழுவது போல உள்ளது' என்ற ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுன ராஜின் கருத்து கட்சி எந்த நிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.

தொகுதி, சின்னம் போன்றவற்றிலான முடிவுகள் அனைத்திலும் கட்சிகளின் சுய முடிவுகள் குறைந்து, அழுத்தத்தின் கீழ் தீர்மானிக்கப்படும் நிலை உருவாகுமானால் அது கூட்டணியா அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அரசியலா என்ற கேள்வி எழுகிறது. தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகள் மெதுவாக தங்களின் அடையாளத்தை இழக்கின்றன என்ற விமர்சனம் புதியதல்ல; ம.தி.மு.க.வின் நிலை அந்த விவாதத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இது தேர்தல் கூட்டணி அல்ல; 'மேலாதிக்க அரசியல் என்ற விமர்சனம்' எழுகிறது.

சொந்த கட்சி சின்னத்தில் நிற்க முடியாத அளவுக்கு அங்கீகாரம் குறைந்த ம.தி.மு.க., இன்று உதயசூரியன் சின்னத்தையே தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு வந்துவிட்ட நிலையில், பேசாமல் தி.மு.க.விலேயே சேர்ந்துவிட்டு தாங்கள் சார்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாக அக்கட்சிக்குள் செயல்படலாமே?

ஒருகாலத்தில் தி.மு.க. எதிர்ப்பு அரசியலின் கர்ஜனை குரலாக இருந்த வைகோ இன்று கூட்டணி அரசியலின் ஒரு சிறிய அரசியல் புள்ளியாக உள்ளார். இது நல்ல மாற்றம் அல்ல; மாறாக மூன்று தசாப்தங்கள் பழமையான ஒரு அரசியல் கட்சியின் அரசியல் செல்வாக்கு குறைந்து வரும் நிலை என பார்க்கப்படுகிறது.

அரசியல் மாற்றங்கள் காலத்தோடு நிகழ்வது இயல்பானதே; ஆனால் அதன் திசை பற்றிய கேள்விகள்தான் இங்கு எழுகிறது. தன்மானம், சுயமரியாதை பற்றி பிறருக்கு பாடம் எடுத்த வைகோவின் அரசியல் பயணம் இன்று எந்த நிலையை எட்டியுள்ளது?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari