Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தொல்காப்பியத்தின் 1602 நூற்பாவை பேனரில் எழுதி சாதித்த தமிழாசிரியைக்கு பாராட்டு!

தொல்காப்பியத்தின் 1602 நூற்பாவை பேனரில் எழுதி சாதித்த தமிழாசிரியைக்கு பாராட்டு!

சோழவந்தான் அருகே தென்கரையில் தொல்காப்பியத்தின் 1602 நூற்பாவை 20 மணி 40 நிமிடத்தில் பேனரில் எழுதி சாதனை செய்த தமிழாசிரியைக்கு பொதுமக்கள் பாராட்டு!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அக்ரஹாரத்தை சேர்ந்த ஸ்ரீமதி ராதா வெங்கட்ராமன். இவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தினுடைய சிஷ்யையாகவும் தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார்.

தமிழ் மீது தீவிர பற்று கொண்ட இவர் தொல்காப்பிய நூல்கள் பற்றிய ஆய்வுகளை குழுவாக சேர்ந்து மேற்கொண்டு வருகிறார். இவரது கவிதைகள் இலங்கை வானொலியில் ஆறுக்கும் மேற்பட்ட முறைகள் வாசிக்கப்பட்டுள்ளது.

இவர் சியாம் ஆர்ட் அகடாமி மூலம் தமிழ் ஆர்வலர்களுடன் சேர்ந்து உலக சாதனை படைப்பதற்கான முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். அந்த வகையில் தொல்காப்பியரின் உருவப்படம் பொறித்த பேனரில் தொல்காப்பியத்தின் 1602 நூற்பாக்களை 20 மணி நேரம் 40 நிமிடத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார்.

இவரின் இந்த முயற்சிக்கு தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர் எதிர்காலத்தில் தனியாக கவிதை நூல் வெளியிடுவது தனது ஆசை என்று கூறும் இவர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழை வளர்க்க கற்றுக் கொடுக்க வேண்டும் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் கூறுகிறார்.

இது குறித்து இவர் கூறுகையில், மதுரை மாவட்டம் தென்கரையில் குடியிருந்து வருகிறேன். பலருக்கும் தொல்காப்பியர் என்ர பெயர் தெரியும் ஆனால் அவரின் உருவம் எப்படி இருக்கும் என்பது தெரியாது. இன்றைய தலைமுறையினர் எங்கும் அவர் வரைபடத்தைப் பார்த்ததும் கிடையாது.

முதல் முறையாக சியாம் ஆர்ட் அகாடமி மூலம் தொல்காப்பியர் எப்படி இருப்பார் என்று ஓர் உருவத்தைக் கொடுத்தார்கள். அவர்களும் நாங்களும் அதாவது தமிழ் ஆர்வலர்களும் சேர்ந்து தொல்காப்பியர் உருவப்படம் வரைந்து அவருக்குள்ளேயே தொல்காப்பியரின் நூற்பாக்களை எழுதலாம் என்று நினைத்து ஆல் இந்தியா வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்துடன்
இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இது ஒரு குழுவாக சேர்ந்து செய்யப்பட்ட செயல்பாடு தான்! 45 பேர் சேர்ந்து குழுவாகச் செய்திருக்கிறோம். இதில் என் முயற்சி என்று எடுத்துக்கொண்டால், 20 மணி நேரம் 40 நிமிடத்தில் 1602 நூற்பாக்களை இந்த உருவப்படத்துக்குள்ள வரைந்திருக்கிறேன். நான் ஒரு தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன்.

சாதிக்க வேண்டும் என்ற ஒரு சின்ன ஆசை. அதன் முதல் முயற்சி தான் இது. இதைத் தாண்டி நான் ஒரு கவிஞரும் கூட! நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். என்னுடைய எதிர்கால ஆசை என்று பார்த்தால் தனியாக ஒரு கவிதை புத்தகம் வெளியிட வேண்டும் என்பதுதான் பெரிய ஆசையாக உள்ளது.

முள்ளிபள்ளத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தில் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லித் தருகிறேன். கிராமப்புறத்தில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ் வளர்க்க வேண்டும்.

இந்த தொல்காப்பியத்தின் சிறப்பு என்னவென்றால், முதல் முதலில் தோன்றிய இலக்கண நூல் எது என்று பார்த்தால் அகத்தியம் தான்! ஆனா அதன் முழுமையான நூட்பாக்களும் பாடல்களும் நமக்கு கிடைக்கப் பெறவில்லை! பெயர் மட்டும்தான் கிடைத்தது.

ஆனால் எழுத்து பூர்வமாக கிடைத்த முதல் இலக்கண நூல் என்று பார்த்தால் நம் தொல்காப்பியத்தை மட்டும்தான் சொல்ல முடியும். ஆனால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் இலக்கணமும் தொல்காப்பியமும் மட்டும்தான் என்று, முடித்துக் கொள்கிறார்கள். அதைச் சார்ந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்களிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த தொல்காப்பியர் படமும் அதற்குள் எழுதப்பட்ட எழுத்துக்களும்!

இது தவிர இலங்கை வானொலியில் 7 முறை எனது கவிதைகள் வாசிக்கப்பட்டு இருக்கிறது. நான் பட்டப் படிப்பு படித்த பின்பு தான் தமிழ் மேல் தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. அதன் பிறகு தான் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். இதற்கு எனது குடும்பத்தினர் குறிப்பாக எனது கணவர் மிகவும் உறுதுணையாக இருப்பது எனக்கு பெருமைக்குரிய ஒன்று.

இன்னும் தமிழ் மொழி நமது மாணவர்கள் மத்தியில் நன்றாக வளர்க்கப்பட வேண்டும். அதற்கு என்ன மாதிரியான உதவிகள் இருந்தாலும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஆகையால் பெற்றோர்களாகிய நீங்கள் தமிழ் மொழியை வளர்ப்பதற்கு, உங்கள் குழந்தைகளுக்கு பிழையில்லாமல் கற்றுக் கொடுக்க வேண்டும்.

மொழிக்கு உயிர் கொடுப்பது முக்கியமல்ல, புத்துயிர் கொடுக்க வேண்டும். ஆகையால் நாம் அனைவரும் சேர்ந்து தமிழ் மொழியை வளர்ப்போம்' - என்று கூறினார்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari