Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

— திருநின்றவூர் ரவிக்குமார் —

நாகா மலைப்பகுதிக்கு 1832 ல் பிரிட்டிஷ்காரர்கள் வந்தார்கள்.

முதல் உலகப் போரின் போது 3000 நாகர்களைக் கொண்ட நாகா உழைப்பாளர்கள் படையை உருவாக்கினார்கள். பதுங்கு குழிகள் வெட்டவும், பொருட்களை சுமந்து செல்லவும் அந்த படையை அவர்கள் பயன்படுத்தினர். போர் முடிந்து இந்தியாவுக்கு திரும்பிய பின்னர் அந்த படையினரில் பலர் ஒன்று சேர்ந்து நாம் தனித்தனி பழங்குடியினர் அல்ல நாகர்கள் என்ற அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு 1918 கொஹிமாவில் நாகர் மனமகிழ் மன்றம் என்பதை ஏற்படுத்தினர். அந்த அமைப்பின் மூலம் பிரிட்டிஷார் வெளியேற வேண்டும் என பிரச்சாரம் செய்தனர்.

17 நாகர் இனக்குழுக்களும் 20 க்கும் மேற்பட்ட கிளை இனக்குழுக்களும் சேர்ந்து 1947 ல் நாகா தேசிய கவுன்சிலை ஏற்படுத்தினர். 1947 ஆகஸ்ட் 14 நாகாலாந்து சுதந்திரம் அடைந்ததாக அறிவித்தனர். 1954 இல் இந்திய ராணுவம் நாகா மலைப்பகுதிக்கு சென்றது. அஸ்ஸாமின் ஒரு பகுதியாக இருந்த நாகாலாந்து 1963 இல் தனி மாநிலமாக ஆனது. நாகாலாந்து பிரச்சனை பழங்குடி அடையாளம், அந்நிய நாட்டு சக்திகளால் தூண்டப்படும் பிரிவினைவாதம், இந்திய அரசு அந்த மாநிலத்தின் மீது காட்டிய அலட்சியம் என பல பிரச்சனைகளின் மொத்த உருவமாக வடிவெடுத்தது . பிரிவினைவாதிகள் தனி அரசமைப்பு, தனி கொடி வேண்டுமென கோரினர்.

நேஷனல் சோசியலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகாலாந்து (ஐசக் - மூவா ) என்ற அமைப்பு பிரிவினைவாதத்தை தீவிரமாக முன்னெடுத்தது. அதற்கு இந்தியாவுக்கு உள்ளும் வெளியிலும் இருந்து உதவிகள் கிடைத்தது. ஆயுதங்கள், வெடி பொருட்கள், ஆயுதப் பயிற்சி, பாதுகாப்பாக பதுங்கிக் கொள்ள இடங்கள், அதற்கான வாகன வசதிகள், பணம் ஆகியவை கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) மூலம் வழங்கப்பட்டன. 1971 வரை அமெரிக்கா அவர்களுக்கு ஆயுதம், பணம், உளவு தகவல்களை சொல்லி வந்தது. பிறகு 1990 வரையில் சீனா அவர்களுக்கு பின்புலமாக இருந்தது. அதன்பிறகு பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ. மியான்மரில் இருந்து செயல்பட்ட அந்த பிரிவினைவாத குழுவுக்கு போதைப்பொருள் கடத்தல் மூலம் பணம் தரப்பட்டது என்று தெற்காசிய பயங்கரவாத கண்காணிப்பு வலைதளம் குறிப்பிடுகிறது.

நான் பாஜக.,வில் சேர்ந்ததற்கு காரணம் வாஜ்பாய்தான், என்கிறார் ஜேம்ஸ் வைசோ. அவர் 2000 ஆண்டு பாஜக., இளைஞர் அணியில் சேர்ந்தார். பிறகு படிப்படியாக மாவட்ட தலைவர், மாநில இளைஞரணி தலைவர், மாநில செய்தி தொடர்பாளர் என்று வளர்ந்து இப்போது பாஜக.,வின் தேசிய செயலாளர் ஒருவராக உள்ளார். அவருடைய வளர்ச்சியும் நாகாலாந்தில் பாஜக.,வின் வளர்ச்சியும் இணையானதாக சொல்லலாம் . இருபது முப்பது உறுப்பினர்களை கொண்டதாக இருந்த கட்சி இப்போது முன்னூறு முழு நேர ஊழியர்களை கொண்டதாக வளர்ந்துள்ளது.

ALSO READ:வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

அந்த வளர்ச்சி சாதாரணமாக வந்து விடவில்லை. கடினமான உழைப்பினால் வந்தது . பாஜக., சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள். அதை வலுவான ஆயுதமாக பயன்படுத்தினார்கள். காரியகர்த்தர்களான எங்களுக்கு உண்மை என்னவென்று தெரியும். முன்பெல்லாம் எங்களை அருவருப்போடு பார்ப்பார்கள் . நாங்கள் கிறிஸ்துவத்தில் உறுதியாக இல்லாமல் பாஜக.,வுக்காக சமரசம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டுவார்கள். சர்ச்சுகள் மூலம் பாஜக.,வில் சேர வேண்டாம், பணிபுரிய வேண்டாம் என்று வற்புறுத்தல்கள் வந்தன. 2018 ல் எனது நண்பர் பாஜக., சார்பில் தேர்தலில் போட்டியிட்டார் . எதிர் கட்சியினர் சர்ச் சுவற்றில் ஹிந்து தெய்வ படங்களை ஒட்டி விட்டு பழியை எங்கள் மீது போட்டனர், என்று கடந்து வந்த கடினமான பாதையை விளக்குகிறார் ஜேம்ஸ் வைஸோ.

மன்மோகன் சிங் ஒரு முறை கூட நாகாலாந்து வந்ததில்லை. ஆனால் வாஜ்பாய் வந்திருக்கிறார். மாநிலத்தின் சிதலமான சாலைகளின் பயணத்திருக்கிறார். அவரது ஆட்சியில்தான் கொஹிமாவிலிருந்து திம்மப்பூர் வரை நான்கு வழி சாலை போடப்பட்டது. அதனால் மூன்று மணி நேரம் பயணம் வெறும் ஒன்றரை மணி நேரமாக குறைந்துவிட்டது. 2014 ல் மோடி பிரதமரான பிறகு ஆறே மாதத்தில் நாகாலாந்து வந்தார் . சர்வதேச புகழ்பெற்ற ஹார்ன்பில் விழாவை தொடங்கி வைத்தார். அவர் பிரதமரான பிறகு மாற்றமும் வளர்ச்சியும் வேகமெடுத்தது . மக்களுக்கு அரிசி, சமையல் எரிவாயு, மருத்துவ காப்பீடு போன்றவை மத்திய அரசின் திட்டங்களாக கிடைத்தன. குறிப்பாக சாலை பணிகள் விரிவாகவும் வேகமாகவும் நடந்தன, என்கிறார் ஜேம்ஸ் வைஸோ.

ALSO READ:ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

நாகாலாந்து மக்களிடையே ஆர்எஸ்எஸ் ராணி கைடென்லியூவை முன்னிருத்தியது . அவர் நாகா மக்களின் ஆன்மீக, அரசியல் தலைவராக இருந்தவர். பிரிட்டிஷ்ஷாரை எதிர்த்து போராடியவர். அதனால் 16 வயதிலேயே அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது ஆங்கிலேய அரசு. 1947 இல் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். நேரு அவருக்கு 'ராணி' என்ற பட்டத்தை கொடுத்தார். பின்னர் அவருக்கு பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டது. தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துவ மதமாற்றத்திற்கு எதிராக அவர் ஹிராகா இயக்கம் என்ற பெயரில் பாரம்பரிய சமயத்தை மீட்டெடுத்தார். அவரது மறைவுக்கு பிறகு வலுவிழந்த அந்த சமய இயக்கத்திற்கு ஆர் எஸ் எஸ் புத்துயிர் ஊட்டியது. கிறிஸ்தவராக மதம் மாறி போயிருந்தவர்கள் மீண்டும் தாய் மதம் திரும்பினர். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அஜெய்லியூ நைமை என்பவர் சமர்ப்பித்த முனைவர் பட்ட ஆய்வேட்டின் தலைப்பு ' ராணி கைடின்லியூ : வடகிழக்கு இந்தியாவின் கதாநாயகி . அந்த ஆய்வேட்டில், அவர் ஹிராகா சமயத்தை கச்சிதமாக அரசியலுடன் இணைத்து பிரிட்டிஷாருக்கு எதிர்ப்பை கூர்மைப்படுத்தினார். கண்ணுக்கு தெரியாதபடியே விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருந்த பெண்களை சமூக - அரசியல் தலைவர்களாக்கினார் . பழங்குடியினரை, குறிப்பாக அவர் சார்ந்த நாகா பழங்குடியினரை, மைய இந்திய நீரோட்டத்தில் இணைக்க முடியும் என்பதற்கு அவரே சிறந்த சான்று. நாகா சமய இயக்கத்தையும் இந்திய தேசிய இயக்கத்தையும் பின்னி பிணைந்து அவர் வளர்த்தார், என்று குறிப்பிடுகிறது.

ALSO READ:நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

ஊடுருவல் பிரச்சனை இன்னமும் அங்கு உள்ளது. 2021 ல் இந்திய ராணுவம், தவறுதலாக, நிற்காமல் சென்ற வாகனத்தை சுட்டனர். அதில் ஆறு பேர்கள் உயிரிழந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் கிராம மக்கள் பதில் தாக்குதல் நடத்த, அதில் ஒரு ராணுவ வீரரும் ஏழு பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இது தேசிய சக்திகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஜேம்ஸ் வைகோ சொல்கிறார் , முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை என்பதை உறுதியாக கூற முடியும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari