Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

— ராமலிங்கம் கிருஷ்ணா —

ந்திய விடுதலைக்காக முதன்மையாக பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார்.

வேங்கடேச சுப்பிரமணியம் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப்பட்டி ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 2.4.1881-ல் பிறந்தார். இவர் தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி முதலிய நிறுவனங்களை நடத்தி வந்தவர்.

வ.வே. சுப்பிரமணியம் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். அக்கால மரபையொட்டி அந்த வயதிலே அத்தை மகள் பாக்கியலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறினார், பின்னர் எம்.ஏ. தேர்ச்சி, சென்னை சென்று வக்கீல் பரீட்சையில் முதல் பிரிவில் தேறி, சென்னை மாநகர் ஜில்லா கோட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார்.

கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார்.வழக்கறிஞர் பட்டம் பெற்றதும் பத்தொன்பதாம் வயதில் திருச்சி திரும்பி வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தார். இவரின் மைத்துனர் பசுபதி ஐயர் என்பார், இவரை ரங்கூனுக்கு அழைத்துச் சென்று பாரிஸ்டர் கல்வி பயில வைக்கத் திட்டமிட்டார். 1907-ல் வ.வே.சு. ரங்கூன் வழி லண்டன் சென்றார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார்.

பட்டம் பெற வந்த வ.வே.சுவை சுதந்திர வீரர் ஆக்கியது இந்தியா ஹவுஸ். அங்கு அடிக்கடி சென்றபோது தீவிர தேசிய இயக்கவாதியான வீர சாவர்க்கர் போன்ற புரட்சி வீரர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, வினாயக் தாமோதர் சாவர்க்கர், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களின் நட்பு, இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கி வந்த அபிநவபாரத் சங்கத்தில் வ.வே.சுவை உறுப்பினராகச் சேரவைத்தது. பிபின் சந்திர பால், லாலா ஹரிதயாள், மேடம் காமா முதலியோருடன் ஒன்றிப் பழகினார். இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.

அபிநவபாரத் சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. வ.வே.சு ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார். அவர் மனதிலும் தேசிய வெறி குடியேற, பாரிஸ்டர் படிப்பு அவருக்கு இரண்டாவது பட்சமாகியது. ஆயினும் படிப்பை அவர் புறக்கணிக்காமல் படித்து முடித்தார். தேர்வில் வெற்றியும் பெற்றார்.

ALSO READ:அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

லண்டன் இந்தியா விடுதியில் தங்கியிருந்த அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். வ.வே.சுவும் துப்பாக்கிப் பயிற்சி பெற்றார். மற்ற புரட்சி இளைஞர்களும் அப்பயிற்சியில் இனைந்தனர்.

1909-ல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் கொண்டாடினர். அதில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர். இதே ஆண்டில் கர்னல் கர்ஸான் வில்லி லண்டனில் சுடப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றவர் மதன்லால் திங்காரா என்ற இந்திய ஹவுஸ் மாணவர். மதன்லால் திங்கராவை இந்த வீரச் செயலுக்கு தயார் செய்தவர் வ வே சு. மாபெரும் வீரரான டிங்கரா, வ வே சு. வைத்த பல சோதனைகளில் வென்று இச்செயலுக்குத் தகுதியானவர் என்பதை நிறுவியபின் இச்செயலுக்குப் பணிக்கப்பட்டார். உதாரணமாக, மதன் லால் டிங்கராவின் புறங்கையில் குத்தப்பட்ட ஊசியானது கையின் மறுபுறம் வந்தபோதிலும் புன்னகைபூத்த முகத்தோடு இவ்வேதனையை மதன்லால் திங்கரா தாங்கிகொண்ட நிகழ்வை கூறலாம். டிங்கராவிற்கு மரணதண்டனை அளிக்கப் பெற்றதும், அந்த வீர இளைஞர் தூக்குமேடை ஏறி, வீர மரணத்தைத் தழுவினார்.

டிங்கரா, கர்ஸன் வைலியைக் கொன்றதன் விளைவாக, சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். இந்தியர்களை தாழ்வாக நடத்திய கர்ஸானின் துர்மரணத்தின் காரணமாக பலரும் தலைமறைவாயினர். *பாரிஸ்டர் பட்டமளிப்பு விழாவில் ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டால் மட்டுமே பட்டம் அளிப்பதாக வழக்கம். பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்ற வ.வே.சு. பட்டமளிப்பு விழாவில் அரச நம்பிக்கையாளன் உறுதிமொழி (ராஜவிசுவாசப் பிரமாணம்) எடுக்க மறுத்தார். பட்டமும் பெறவில்லை.

பட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுக்க மறுத்ததால் அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. வினாயக் தாமோதர் சாவர்க்கரை மாறுவேடத்தில் வ.வே.சு சந்தித்தார். அப்போது சாவர்க்கர் வ.வே.சு.வை எவ்வாறாயினும் இந்தியா தப்பிச் செல்லக் கூறினார். அவ்வண்ணம் வ.வே.சுவும் சீக்கியர் போல் வேடம் பூண்டு பிரான்ஸ் சென்றார். அங்கே அவரை வேவுபார்க்க வந்தவனிடம் தாம் வீர விக்ரம்சிங் என்ற சீக்கியர் என்று கூறி ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாகப் பயணம் செய்தார். அப்பயணம் வீரதீர சாகசச் செயல்கள் நிறைந்தது. மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பல பிரிட்டிஷ் உளவாளிகளை வெற்றிகரமாக எமாற்றி பயணம் செய்த பின், 1910 அக்டோபர் 9-ல் வ.வே.சு. புதுச்சேரி வந்தார்.

மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், மகாகவி பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி, வ. ரா. போன்ற மற்ற வீரர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்குப் போராடினார். இங்கும் வ.வே.சு. இந்தியா பத்திரிகைக்கு தொடர்ந்து எழுதி வந்தார்.

ALSO READ:வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

இங்கு தர்மாலயம் என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார். வ.வே.சு. தமது உட்கிடக்கையாக விளங்கிய கெரில்லாப் புரட்சி முறைகளை முதிர்ந்தவர்க்கு புகட்டியதுடன், துப்பாக்கிச் சுடும் பயிற்சியை விடுதலை வேட்கிகளுக்கு அளித்தார். சங்கேத பாஷையில் செய்தி பரப்பி தேச விடுதலை உணர்வுக்கு உரம் இட்டு ஊக்கி வளர்த்தார்.

முதல் உலகப் போரின்போது, வவேசுவை அல்ஜியர்ஜுக்கு நாடு கடத்த ஆங்கில அரசு சூழ்ச்சி செய்து, பிரஞ்சு அரசை அணுகிற்று. இது கைகூடவில்லை. கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் என்னும் வீர இளைஞனுக்குப் புதுச்சேரியில் முன்னதாக வ.வே.சு. துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் என்றறியப்படும் கருவடிக்குப்பத்தில் இந்தப் பயிற்சி நடந்தது.

கலெக்டர் ஆஷைக் கொல்ல வாஞ்சிநாதன் பயன்படுத்திய துப்பாக்கி பிரெஞ்சு நாட்டுத் தயாரிப்பு. வவேசு தந்தது என்றொரு குறிப்பு இருக்கிறது. ஆஷ் படுகொலைக்குப் பிறகு புதுச்சேரியில் தீவிரவாத குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது. ஆனால், இவ்வளவு இருந்த போதிலும் கொலை வழக்கில் வவேசு ஐயருடைய பெயர் வரவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் ஆங்கிலேய உளவாளிகளால் வவேசு மட்டுமன்றி அவரின் மனைவி திருமதி பாக்கியலஷ்மி அம்மாளும் பல துன்பங்களை அடைந்தனர்.

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

முதல் உலகப்போர் முடிந்ததும், வ.வே.சு பிரிட்டிஷ் இந்தியா வர அனுமதிக்கப் பட்டார். 14 ஆண்டுகள் தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வரமுடியாமல் மற்ற மனிதர்களுக்காகப் போராட்டத்திற்கு வாழ்வை அர்ப்பணித்த வவேசு 1920-ல் பொது மன்னிப்புப் பெற்று திருச்சியில் உள்ள தனது வரகனேரி இல்லம் வந்தார்.

ஏதேனும் ஒருவகையில் சுதந்திரத்திற்குப் போராடிக்கொண்டே இருப்பது என்று தீர்மானித்த அவர் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொண்டு உழைத்தார். தமிழ்த்தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தேசபக்தன் இதழிலிருந்து விலகவும், அதன் ஆசிரியர் பொறுப்பை வ.வே.சு ஏற்றார். 1920-ல் சென்னை சென்று தேசபக்தன் இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக பல வீரர்களை உருவாக்கிய கட்டுரைகளை எழுதினார். இதனால் ஆங்கில அரசு அவரை காவு கொள்ள நினைத்தது, தேசபக்தனில் அவர் எழுதாத ஓர் எழுச்சிக் கட்டுரையைக் காட்டி, இராஜத்துவேஷ குற்றம் சாட்டி பெல்லாரி சிறைக்கு அனுப்பியது எதேச்சதிகார ஆங்கிலேய அரசு. பெல்லாரி சிறையில் சிலகாலம் இருந்து, பின்னர் விடுதலையானார்.

ALSO READ:பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

மகாகவி பாரதியார் தலித்தாகப் பிறந்த ரா.கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்த புண்ணிய நிகழ்வை தலைமை தாங்கி நடத்தினார் வவேசு.

பாரதிக்கு உடல் நலமில்லை என்ற செய்தி பல நண்பர்களுக்குத் தாமதமாகவே தெரிந்தது. தாம் எழுதாத ஒரு தலையங்கத்திற்காக செப்டம்பர் 11-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று கொண்டிருந்த வ.வே.சு, நிலைமையறிந்து, போகும் வழியில், போலீஸ் துணையோடு பாரதியின் வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்தார். அவரது குடும்பத்தாருடன் பேசினார். அவர்கள் பாரதி மருந்து உட்கொள்ள மறுப்பதைச் சொன்னர்கள். 'பாரதி, நீ மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே? சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?' என்று பரிவோடு அறிவுறுத்திவிட்டு வேதனையோடு சிறை சென்றார்.'

தம் குருகுல மாணவர்களுடன் 3.6.1925 அன்று அம்பாசமுத்திரம், பாபநாசம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். சுற்றுலாவைக்கூட மாணவர்களை வீரர்களாக உருவாக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதிய வவேசு அவர்கள் அகண்ட அருவியை பயமின்றி தாண்டுமாறு மாணாக்கருக்குப் பணித்தார். சிறுபெண்ணான சுபத்திரை தானும் அவ்வருவியை எந்த உதவியும் இன்றி தாண்ட விரும்பினார்.

தந்தையான வவேசுவின் தயக்கத்தைக் கண்டு 'ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்று கூறும் நீங்கள் பெண் என்பதால் என்னை தாண்ட அனுமதிக்காமலிருக்கிறீர்களா' என்று கூறியதால் உவகை அடைந்த பெருமான் தன் பெண் குழந்தைக்கும் அருவி தாண்ட அனுமதி தந்தார். சிறு பெண்ணான சுபத்திரை அம்முயற்சியில் தவறி அருவியில் விழுந்தார். அவரைக் காப்பாற்ற குதித்த வவேசுவும் அவ்வருவியிலேயே அமரத்துவம் எய்தினர். வ.வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு பாபநாசம் அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து 1925 ஜூன் 4-ல் அணைந்தது.

வாழ்க நீர் எம்மான்….

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari