Dailyhunt
அமெரிக்கா - ஈரான் மோதலை மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் போட்ட பகீர் ஸ்கெட்ச்!

அமெரிக்கா - ஈரான் மோதலை மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் போட்ட பகீர் ஸ்கெட்ச்!

மெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில், அந்த நாட்டு உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.

இதற்குப் பழிவாங்கத் துடிக்கும் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைத் தளங்கள் மீது சரமாரித் தாக்குதல்களை நடத்தி வருவதால் மத்திய கிழக்கு நாடுகள் போர்க்களமாக மாறியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், பரம எதிரிகளாகப் பார்க்கப்படும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் முன்வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தாஹிர் அண்ட்ராபி, வரும் நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தி மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து முன்மொழிந்த ஐந்து அம்சத் திட்டத்திற்கு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்கத் தங்களை ஒரு பாலமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பாகிஸ்தான் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்காவுடன் தங்களுக்கு இருக்கும் முக்கிய உறவைப் பயன்படுத்தி, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர தீவிரமாக உழைக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்த மத்தியஸ்த முயற்சிக்கு ஈரானும் அமெரிக்காவும் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் திடீர் திருப்பம் உலக அரசியலில் அடுத்தக்கட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai