Dailyhunt
அமெரிக்க ராணுவத் தளபதி அதிரடி நீக்கம்... பென்டகன் அதிரடி!

அமெரிக்க ராணுவத் தளபதி அதிரடி நீக்கம்... பென்டகன் அதிரடி!

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தின் 41-வது தலைமைத் தளபதியான ஜெனரல் ராண்டி ஜார்ஜை, பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக ஓய்வு பெறுமாறு அந்நாட்டின் பாதுகாப்புத் துறை (போர்) அமைச்சர் பீட் ஹெக்செத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இதனை அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது. 2023-ம் ஆண்டு பொறுப்பேற்ற ராண்டி ஜார்ஜின் பதவிக்காலம் 2027-ம் ஆண்டு வரை இருந்த போதிலும், ஓராண்டிற்கு முன்னதாகவே அவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ராண்டி ஜார்ஜ் நீக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணம் குறித்து பென்டகன் மௌனம் காத்து வருகிறது. இருப்பினும், ஈரானுடனான போரில் அமெரிக்கா சில பின்னடைவுகளைச் சந்தித்தது ஒரு காரணமாக இருக்கலாம் என்று ராணுவ வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதே நேரத்தில், இது ராணுவ நிர்வாகத்தை நவீனப்படுத்தவும், அதிபர் டிரம்ப் மற்றும் அமைச்சர் ஹெக்செத் ஆகியோரின் புதிய தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு மறுசீரமைப்பு நடவடிக்கை என பென்டகன் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பீட் ஹெக்செத் பொறுப்பேற்ற பிறகு, ராணுவத்தின் உயர் மட்டங்களில் மேற்கொள்ளப்படும் பல கட்டாய ஓய்வு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ராண்டி ஜார்ஜ் பல தசாப்தங்களாக ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவித்துள்ள பென்டகன், அவர் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது. அவருக்குப் பதிலாகப் புதிய தளபதியை நியமிக்கும் வரை, லெப்டினன்ட் ஜெனரல் கிறிஸ்டோபர் லானேவ் தற்காலிகமாக அந்தப் பொறுப்பை கவனிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai