பிரதமர் மோடியும் – கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சையும் இன்று வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினார்கள்.
இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:
இன்று காலை சுந்தர்பிச்னையுடன் மிகவும் பயனுள்ள ஆலோசனை நடத்தினேன். பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம். முக்கியமாக, தொழில்நுட்பத்தின் ஆற்றலை பயன்படுத்தி, இந்திய விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோரின் வாழ்க்கையை மாற்றுவது குறித்து ஆலோசித்தோம்.
ஆலோசனையின் போது, சுந்தர்பிச்சையும், நானும், கொரோனா காலத்தில் உருவாகியுள்ள புதிய தொழில் கலாசாரம் குறித்து பேசினோம். விளையாட்டு உள்ளிட்ட துறைகளில், கொரோனா கொண்டு வந்துள்ள சவால்கள் குறித்து ஆலோசித்தோம்.
சைபர் பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் ஆலோசித்தோம்.
கல்வி, கற்பித்தல், டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் பணபரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், கூகுள் நிறுவனத்தின் முயற்சிகள் குறித்து அறிந்து கொண்டேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
கூகுள் மற்றும் ஆல்பாபெட் சிஇஓ சுந்தர்பிச்சை டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வேகப்படுத்த உதவுவதற்காக, 10 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்கிறோம். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கொள்கையை ஆதரிப்பதில் பெருமை கொள்கிறோம். அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் ரமேஷ் பொக்ரியாலுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

