Dailyhunt
இதைச் சாப்பிட மறக்காதீங்க! சித்ரகுப்தருக்குப் பிடித்த நைவேத்யம்... விரத நிறைவும், முழுநிலவு தரிசனமும்?!

இதைச் சாப்பிட மறக்காதீங்க! சித்ரகுப்தருக்குப் பிடித்த நைவேத்யம்... விரத நிறைவும், முழுநிலவு தரிசனமும்?!

வக்கிரகங்களில் ஒருவரான கேது பகவானுக்குரிய அதிதேவதையாகச் சித்ரகுப்தர் போற்றப்படுகிறார். சித்ரா பௌர்ணமி நாளில் இவரை அர்ச்சித்து விரதமிருந்து பூஜித்தால், ஜாதகத்தில் உள்ள கேது கிரகத்தால் விளையும் தீமைகள் பெருமளவு குறையும்.

காரணாகமம் என்கிற ஆகம விதிப்படி, ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதில் சித்ரா பௌர்ணமி அன்று மேற்கொள்ளப்படும் 'சித்ரகுப்த விரதம்' தீராத கர்ம வினைகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது. தெரியாமல் செய்த தவறுகளுக்காக இன்று மனமுருகி மன்னிப்பு கேட்டு விரதமிருந்தால், அந்தப் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நல்வாழ்வு கிட்டும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இன்றைய நாள் முழுவதும் விரதமிருந்து சித்ரகுப்தரை வழிபட உகந்த நேரமாகும். சந்திரனும் சூரியனும் முழு பலம் பெற்று விளங்கும் இத்தருணத்தில், விரதத்தைத் தொடங்கி முழு நிலவு தரிசனம் வரை கடைப்பிடிப்பது மிகுந்த நற்பலன்களைத் தரும்.சித்ரகுப்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் இன்று அதிகாலையிலேயே நீராடி விரதத்தைத் தொடங்க வேண்டும். வீட்டின் பூஜை அறையைச் சுத்தப்படுத்தி, வாசலில் மாக்கோலமிடுவது அவசியம். சித்ரகுப்தர் கணக்கு எழுதுபவர் என்பதால், ஒரு ஏடு (நோட்டுப் புத்தகம்) மற்றும் எழுதுகோல் (பேனா) ஆகியவற்றைச் சுத்தமான பலகையில் வைத்து, அதன் மேல் சந்தனம், குங்குமம் இட்டு விளக்கேற்ற வேண்டும். சித்ரகுப்தரின் திருவுருவப் படம் இருப்பின் அதற்குச் செவ்வரளி மாலை அணிவித்து வழிபடலாம். இல்லையெனில், இறைவனை மனதார நினைத்து அந்த ஏட்டையே சித்ரகுப்தராகக் கருதி பூஜிப்பது மரபாகும்.

உப்பு தவிர்த்தல் மற்றும் உணவு முறைகள்

இந்த விரதத்தின் மிக முக்கியமான அம்சம் உணவு முறையில் உள்ளது. விரதம் இருப்பவர்கள் இந்த நாளில் ஒருவேளை உணவிலாவது உப்பை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். உப்பு இல்லாத உணவை உண்பது நம் கர்ம வினைகளைக் குறைக்கும் என்பது ஐதீகம். முக்கியமாக, விரதத்தின் போது பசுவிலிருந்து கிடைக்கும் பால், நெய், தயிர் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இதற்குப் பதிலாக எருமைப்பால் அல்லது அதிலிருந்து கிடைக்கும் தயிரைப் பயன்படுத்தலாம். ஏனெனில், சித்ரகுப்தர் எருமைப்பால் மற்றும் எருமைத் தயிரையே விரும்பி ஏற்பார் என்பது ஒரு ஐதீகமாகப் பின்பற்றப்படுகிறது.

சித்ரகுப்தருக்குப் பிடித்த நைவேத்தியம்

சித்ரகுப்தருக்கு இன்று மிக விசேஷமான நைவேத்தியங்களைப் படைக்க வேண்டும். உப்பு இல்லாத தயிர் சாதம் படைப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இதனுடன் சர்க்கரைப் பொங்கல், பயத்தம்பருப்பு மற்றும் எருமைப்பால் சேர்த்துக் காய்ச்சிய பாயசம் ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். கையில் எழுத்தாணியுடன் சித்ரகுப்தர் இருப்பதால், அவருக்கு இந்த இனிப்புப் பண்டங்களை நிவேதனம் செய்து, தீபாராதனை காட்டி வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் இனிமை சேரும்.

விரத நிறைவு மற்றும் நிலவு தரிசனம்

காலையில் தொடங்கிய விரதத்தை இரவு முழு நிலவு தோன்றும் வரை தொடர வேண்டும். மாலையில் சந்திரன் உதயமாகும் வேளையில், வானில் ஜொலிக்கும் முழு நிலவைப் பார்த்து தரிசனம் செய்ய வேண்டும். அந்த முழு நிலவின் ஒளியில் இறைவனை வணங்கி, பின்னர் சித்ரகுப்தருக்குப் படைக்கப்பட்ட நைவேத்தியங்களை உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம். இரவு நேரத்தில் நிலவின் ஒளியில் அமர்ந்து குடும்பத்துடன் உணவு உண்பது ஆரோக்கியத்தையும் மன மகிழ்ச்சியையும் தரும்.

சித்ரா பௌர்ணமி என்பது வெறும் வழிபாடு மட்டுமல்ல, அது ஒரு சுய பரிசோதனைக்கான நாள். இந்த நாளில் நாம் கடைப்பிடிக்கும் சித்ரகுப்த விரதம் நம்மைத் தூய்மைப்படுத்துவதுடன், வரவிருக்கும் காலங்களில் நேர்மையான பாதையில் செல்ல நமக்கு வழிகாட்டும். முறையான விரதத்தோடு, அசைவ உணவுகளைத் தவிர்த்து, தூய்மையான மனதுடன் சித்ரகுப்தரை வழிபடுவதன் மூலம் கேது கிரகத்தின் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு, புண்ணியங்களைச் சேர்த்து, ஒளிமயமான எதிர்காலத்தைப் பெறலாம். எனவே, இந்தச் சித்ரா பௌர்ணமியில் விரதமிருந்து இறையருளை முழுமையாகப் பெறுவோம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai