Dailyhunt
காங்கிரஸுக்கு 'டாட்டா': 37 ஆண்டு கால பந்தத்தை முறித்தார் அமெரிக்கை நாராயணன்!

காங்கிரஸுக்கு 'டாட்டா': 37 ஆண்டு கால பந்தத்தை முறித்தார் அமெரிக்கை நாராயணன்!

மிழக அரசியல் களத்தில் நீண்ட காலமாகக் காங்கிரஸ் கட்சியின் முகமாக அறியப்பட்ட அமெரிக்கை நாராயணன் தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடந்த 1988 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய இவர் சுமார் 37 ஆண்டுகளாகக் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் திறம்படச் செயல்பட்டு வந்தார். ராஜீவ் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்த இவர் தற்போது நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் அதிருப்தி காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. பாரம்பரியமிக்க ஒரு பேச்சாளர் திடீரென விடைபெறுவது சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய விலகல் குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்கை நாராயணன் கட்சி என்பது மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். காலத்திற்கு ஏற்ப மாறாத எந்தவொரு அமைப்பும் வெற்றியை எட்ட முடியாது என்றும் ஏவுகணை காலத்தில் கையில் கத்தியுடன் களத்தில் நிற்பது முட்டாள்தனம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே கட்சியின் தலைமை மற்றும் செயல்முறைகள் மீது அவர் கொண்டிருந்த அதிருப்தி தற்போது முழுமையான விலகலில் வந்து முடிந்துள்ளது. மக்களுடன் நேரடியாக இணைந்து பணியாற்றுவதே தனது நோக்கம் என்றும் அதற்குத் தற்போதைய சூழல் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் அவர் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினாலும் தனது பொதுச்சேவை ஒருபோதும் நிற்காது என்றும் தொடர்ந்து மக்களுக்காகக் களத்தில் நிற்பேன் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் கட்சியின் கொள்கைகளை ஆக்ரோஷமாக முன்வைத்த ஒரு மூத்த நிர்வாகி வெளியேறியிருப்பது கட்சிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட இவர் விரைவில் வேறு ஏதேனும் ஒரு வலுவான அமைப்பில் இணையக்கூடும் அல்லது தனித்துச் செயல்படக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai