Dailyhunt
கிளம்ப வேண்டிய நேரத்தில் ஹெலிகாப்டர் கோளாறு... செல்போன் மூலம் உரையாற்றிய அமித் ஷா!

கிளம்ப வேண்டிய நேரத்தில் ஹெலிகாப்டர் கோளாறு... செல்போன் மூலம் உரையாற்றிய அமித் ஷா!

குவஹாத்தி: அசாம் மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு (ஏப்ரல் 9, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது), பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நேற்று ஒரு சிறிய பின்னடைவு ஏற்பட்டது.

துப்ரி (Dhubri) மாவட்டத்தின் கோலாகஞ்ச் (Golakganj) பகுதியில் நடைபெறவிருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், அவர் பயணம் செய்யவிருந்த ஹெலிகாப்டரில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஹெலிகாப்டரால் திட்டமிட்டபடி தரையிறங்கவோ அல்லது பறக்கவோ இயலவில்லை. பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் அந்தப் பொதுக்கூட்டத்திற்கு அவரால் நேரில் வர முடியாத சூழல் உருவானது. இதனால் அங்குக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இருப்பினும், தனது ஆதரவாளர்களை ஏமாற்ற விரும்பாத அமித் ஷா, அங்கிருந்த பா.ஜ.க வேட்பாளர் அஷ்வினி ராய் சர்க்காரின் செல்போன் வாயிலாக பொதுக்கூட்டத்தில் கூடியிருந்த மக்களிடையே உரையாற்றினார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேரில் வர இயலாததற்குப் பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய அவர், பா.ஜ.க-வுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் சாலை மார்க்கமாகத் தனது அடுத்தடுத்த தேர்தல் பயணங்களைத் தொடர்ந்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai