தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ஜூப்ளிநகரைச் சேர்ந்த ஸ்ரீசைலம் என்பவன் தனது இரட்டைப் பெண் குழந்தைகளைக் கிணற்றில் வீசிக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியையே உறைய வைத்துள்ளது.
நான்கு வயதே ஆன கீதான்ஸ்ரீ மற்றும் கீதான்விகா ஆகிய பிஞ்சு குழந்தைகள் பிறந்த நாள் முதலே பெண் குழந்தைகள் என்ற காரணத்திற்காக ஸ்ரீசைலம் தனது மனைவி மவுனிகாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளான். கடந்த வெள்ளிக்கிழமை மதியம் குழந்தைகளை விவசாய நிலத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறிச் சென்றவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த தாய் அங்கு சென்று கேட்டபோது குழந்தைகள் விளையாடும்போது கிணற்றில் தவறி விழுந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளான்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் பல மணி நேரம் போராடி இரண்டு பெண் குழந்தைகளின் உடல்களையும் சடலமாக மீட்டனர். தந்தையின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த கிராம மக்கள் அவனைப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில் அந்தப் பாவி செய்த கொடூரச் செயல் அம்பலமானது. தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் இந்தப் பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டால் மனைவி விவாகரத்து கொடுத்துவிடுவார் என்றும் அதன் பிறகு வேறொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளியதாக அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

பெற்ற மகள்களைக் காலனுக்கே காவு கொடுத்த அந்தக் கல்நெஞ்சக்காரத் தந்தையைத் காவல்துறையினர் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வெறும் நான்கு வயதே ஆன பிஞ்சுகள் தங்களின் தந்தையே தங்களைக் கொல்லப் போகிறான் என்று தெரியாமல் அவனுடன் சென்றது அங்கிருந்தோரை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்துள்ளது. விவாகரத்து பெற்று மறுமணம் செய்ய மகள்களைப் பலி கொடுத்த இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

