Dailyhunt
செலவு செய்த பணத்தைத் திருப்பிக் கேட்ட காதலன் கடத்தல்! காதலி உட்பட 4 பேர் கைது!

செலவு செய்த பணத்தைத் திருப்பிக் கேட்ட காதலன் கடத்தல்! காதலி உட்பட 4 பேர் கைது!

சென்னையில் பிரிந்து சென்ற காதலிக்குத் தான் செலவு செய்த பணத்தைத் திருப்பிக் கேட்ட சட்டக் கல்லூரி மாணவரைக் கடத்தியதாக, அவரது முன்னாள் காதலி உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சட்டக் கல்லூரி மாணவரான சசிகுமார் என்பவரும், ரித்தியா என்ற பெண்ணும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். தாங்கள் காதலித்த காலத்தில் ரித்தியாவிற்காகத் தான் செலவு செய்த பணத்தைச் சசிகுமார் திருப்பிக் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து ரித்தியாவிற்கு அழுத்தம் கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.

பணத்தைத் திருப்பிக் கேட்டுத் தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த ரித்தியா, தனது நண்பர்களுடன் சேர்ந்து சசிகுமாரைக் கடத்தத் திட்டமிட்டுள்ளார்.

சென்னை கோயம்பேடு பகுதியில் சசிகுமாரைச் சந்தித்த ரித்தியா மற்றும் அவரது நண்பர்கள், அவரை வலுக்கட்டாயமாகக் காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். இது குறித்துத் தகவல் அறிந்த போலீஸார் உடனடியாகச் செயல்பட்டுத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கடத்தப்பட்ட மாணவர் சசிகுமாரைப் பத்திரமாக மீட்ட கோயம்பேடு போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ரித்தியா (முன்னாள் காதலி), தர்ஷினி, சஞ்சய், சரவணன் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைதான 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai