பாராளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக ரயிலில் பயணம் செய்த ராணுவ வீரர்களுக்கு இருக்கை கிடைக்காததால், அவர்கள் கழிப்பறைக்கு அருகிலேயே தரையில் படுத்து உறங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றும் வீரர்களுக்கு நேர்ந்த இந்த கதி, காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக விரைந்து கொண்டிருந்த அந்த வீரர்கள், ரயிலில் முன்பதிவு செய்ய முடியாத காரணத்தால் வேறு வழியின்றி தரையிலேயே தஞ்சம் அடைந்தனர். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் (TTR), வீரர்கள் கழிப்பறை அருகே உறங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர்களிடம் விசாரித்தபோது, அவசரப்பணி என்பதால் தங்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய இயலவில்லை எனத் தங்களது அடையாள அட்டைகளைக் காட்டி வீரர்கள் விளக்கமளித்தனர்.
இதனைக் கேட்ட அந்த டிக்கெட் பரிசோதகர், மனிதாபிமான அடிப்படையில் அந்த வீரர்களுக்கு ரயிலிலேயே அமர்ந்து உறங்குவதற்குத் தேவையான இருக்கை வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்து தந்தார். இந்தச் சம்பவம் எந்த ரயிலில் அல்லது எந்த வழித்தடத்தில் நடந்தது என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை என்றாலும், இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ராணுவ வீரர்களின் தியாகத்தையும், அந்த டிக்கெட் பரிசோதகரின் நற்செயலையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

