Dailyhunt
திருப்பதி மலைப்பாதையில் தீப்பிடித்த கார்!

திருப்பதி மலைப்பாதையில் தீப்பிடித்த கார்!

திருப்பதியைச் சேர்ந்த லாவண்யகுமார் என்பவர், தனது காரில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் மாலை திருமலையை நோக்கிப் புறப்பட்டார்.

கார் 2-வது மலைப்பாதையில் உள்ள ஜி.என்.சி. சுங்கச்சாவடி அருகே திவ்யாராமம் பகுதியில் சென்றபோது, காரின் எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனைப் பார்த்த ஓட்டுநர் உடனடியாக காரைச் சாலையோரம் நிறுத்தி, அதில் இருந்தவர்களைக் கீழே இறங்குமாறு எச்சரிக்கை விடுத்தார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே தீ மளமளவெனப் பரவி கார் முழுவதும் எரியத் தொடங்கியது. காரில் பயணம் செய்த பக்தர்கள் அனைவரும் உடனடியாகக் கீழே குதித்ததால், பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்த திருமலை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இந்தத் தீ விபத்து குறித்து திருமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். அதில் காரின் மின்சேமிப்பு கலன் (Battery) அதிக வெப்பமடைந்ததால், மின் கசிவு (Short Circuit) ஏற்பட்டு தீ பிடித்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. கோடைக்காலத்தில் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் தங்களது இயந்திரத் தகுதியைச் சரிபார்த்துச் செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai