Dailyhunt
தூத்துக்குடியில் பயங்கரம்! மது அருந்தியதைத் தட்டிக்கேட்டவருக்கு அரிவாள் வெட்டு!

தூத்துக்குடியில் பயங்கரம்! மது அருந்தியதைத் தட்டிக்கேட்டவருக்கு அரிவாள் வெட்டு!

தூத்துக்குடி அருகே உள்ள கீழவைப்பார் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜாய்விக்டோரியன் (32). இவர் நேற்று முன்தினம் இரவு பணிகள் நிமித்தமாகத் திரேஸ்புரம் குடியிருப்புப் பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது திரேஸ்புரம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஓரிடத்தில் அமர்ந்து இருவர் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பொது இடத்தில் இடையூறாக மது அருந்துவதைக் கண்ட ஜாய்விக்டோரியன், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், ஜாய்விக்டோரியனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றவே, போதையில் இருந்த அந்த நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜாய்விக்டோரியனைச் சரமாரியாக வெட்டினர். இதில் அவரது கை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

ஜாய்விக்டோரியனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட அந்த மர்ம நபர்கள், இருளில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயமடைந்த ஜாய்விக்டோரியனை மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்துத் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திரேஸ்புரம் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய அந்த இருவர் யார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் நடக்கும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai