கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 11 மாதக் குழந்தை உயிரிழந்த துயரம் தாளாமல், மென்பொருள் நிறுவன ஊழியரான தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த 29 வயதான பிரதிபா என்ற ஐடி ஊழியரின் மகன் அகஸ்தியா, எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

தன் கண் முன்னே நடந்த இந்த விபரீதத்தால் நிலைகுலைந்து போன பிரதிபா, நேற்று (ஏப்ரல் 1) தற்கொலை செய்துகொண்டார். முதலில் அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்ட அவர், பின்னர் தூக்கிட்டுத் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதத்தில், "எனது மகனின் மரணத்திற்கு நானே காரணம்; இந்தக் குற்றவுணர்ச்சியுடன் என்னால் இனி வாழ முடியாது" எனத் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார் பிரதிபாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே வீட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரண்டு மரணங்கள் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்து மற்றும் தற்கொலைக்கான பின்னணி குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறு குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

