சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தற்போது சுமார் 108 தொகுதிகளில் முன்னிலை ( வெற்றி ) பெற்றுள்ளது.
எனவே, மீதமுள்ள 10 இடங்களுக்கு ஆதரவு தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், தவெக எந்தக் கட்சியிடம் அல்லது கூட்டணியிடம் ஆதரவு கோரப் போகிறது என்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் (காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்டவை) ஆதரவு கோருமா, அல்லது அதிமுக தலைமையிலான கூட்டணியிடம் பேச்சுவார்த்தை நடத்துமா, அல்லது நேரடியாக அதிமுகவிடம் ஆதரவு கோருமா என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.
தவெக தலைவர் விஜய், தேர்தலுக்கு முன்பு எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தனித்து நின்று போட்டியிட்டார். எனவே, ஆட்சி அமைக்கும் பொறுப்பு வந்தால், அவர் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆதரவு பெறாமல் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை என்பதால், அடுத்த சில மணி நேரங்களில் முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், தவெகவின் ஆதரவு தேடல் தமிழக அரசியலை மேலும் சிக்கலாக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

