சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் மாநில அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 34.92% வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்து, 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளதால், பிற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் கட்சி முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறது. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது,"தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து தமிழக காங்கிரஸ் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் அடுத்தகட்ட நகர்வு இருக்கும். விஜய்க்கு ஏற்கனவே ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துவிட்டார்" என்றார்.
காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் தவெகவை ஆதரிக்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், "தவெகவில் இருந்து இதுவரை என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை" என்றும் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.பெண்கள் மற்றும் இளைஞர்களின் பெரும் ஆதரவு கிடைத்ததாலேயே தவெக இவ்வளவு இடங்களைப் பெற்றுள்ளது என்பது அரசியல் பார்வையாளர்களின் மதிப்பீடாக உள்ளது.
தவெக தனித்துப் போட்டியிட்டும் பெரும் வெற்றி பெற்றுள்ளது தமிழக அரசியலில் புதிய சமன்பாட்டை உருவாக்கியுள்ளது.தவெகவுக்கு ஆதரவளித்து ஆட்சியில் பங்கேற்கலாமா என்பது குறித்து காங்கிரஸ் உயர்மட்டம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

