நிலவை ஆய்வு செய்யும் அமெரிக்காவின் மிக முக்கியமான ஆர்ட்டெமிஸ் II (Artemis II) மிஷன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை மிக அருகில் கடந்து சென்று, வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளனர். இன்று (ஏப்ரல் 7, 2026) நடைபெற்ற இந்த முக்கிய நிகழ்வில், ஓரியன் (Orion) விண்கலம் நிலவின் மிக அருகில் சென்று, அதன் இருண்ட பக்கத்தை (far side of the Moon) நேரடியாகப் பார்த்த முதல் மனிதர்கள் என்ற பெருமையைப் பெற்றனர்.
இதுவரை எந்த மனிதரும் நேரடியாகப் பார்க்காத நிலவின் பின்புறத்தை இவர்கள் கண்டு ரசித்தனர். மேலும், இந்த மிஷனின் மற்றொரு முக்கிய சாதனை என்னவென்றால், பூமியில் இருந்து மனிதர்கள் இதுவரை சென்றிராத அதிகபட்ச தொலைவை எட்டியுள்ளது. ஓரியன் விண்கலம் பூமியில் இருந்து 4,06,776 கிலோமீட்டர் தூரத்தை எட்டியது. இது 1970-ஆம் ஆண்டு அப்போலோ 13 மிஷன் படைத்த 2,48,655 மைல் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையாக அமைந்துள்ளது.
இன்று அதிகாலையில், விண்கலம் நிலவின் பின்புறம் சென்றபோது, விண்வெளி வீரர்களுக்கும் பூமிக்கும் இடையேயான அனைத்து தகவல் தொடர்பும் 42 நிமிடங்கள் முழுமையாக துண்டிக்கப்பட்டது. இது முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுதான் என்றாலும், சுமார் 42 நிமிடங்கள் கழித்து தொடர்பு மீண்டும் ஏற்பட்டது.நிலவை மிக அருகில் கடந்தபோது, வீரர்கள் நிலவின் பழங்கால எரிமலை ஓட்டங்கள், பெரிய அளவிலான பள்ளங்கள் (impact craters), பிளவுகள் மற்றும் மேடு பள்ளங்கள் ஆகியவற்றை உன்னிப்பாகப் புகைப்படம் எடுத்துள்ளனர்.
மேலும், விண்கலத்திலிருந்து சூரிய கிரகணத்தை சுமார் ஒரு மணி நேரம் நேரடியாகக் கண்டு ரசித்தனர். இந்த அரிய நிகழ்வின்போது, நிலவின் இருண்ட பகுதியையும், சூரியனின் கொரோனா (solar corona) ஒளியையும், நிலவின் மீது விழுந்த உலோகக் கற்கள் (meteoroids) ஏற்படுத்திய ஒளி மின்னல்களையும் (light flashes) பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.இந்த முழு நிகழ்வும் நாசா தனது இணையதளம், யூடியூப் மற்றும் பிரைம் வீடியோ, ஆப்பிள் டிவி, நெட்ஃபிக்ஸ், எச்பிஓ மேக்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஸ்ட்ரீமிங் தளங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
1972-ஆம் ஆண்டு அப்போலோ 17 மிஷனுக்குப் பிறகு, நிலவுக்கு மனிதர்கள் திரும்பிய முதல் மிஷன் என்ற வரலாற்றுப் பெருமையை ஆர்ட்டெமிஸ் II பெற்றுள்ளது.விண்வெளி வீரர்கள் சேகரித்த புகைப்படங்கள் மற்றும் அறிவியல் தரவுகள் ஏற்கனவே பூமிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. நாளை (ஏப்ரல் 8) வீரர்கள் நிலவியல் அறிவியல் குழுவுடன் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். இந்த உரையாடலும் நாசாவால் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்.
ஆர்ட்டெமிஸ் II மிஷனின் இந்த வெற்றி, திட்டமிடப்பட்டுள்ள ஆர்ட்டெமிஸ் III மிஷனுக்கு - அதாவது நிலவின் மேற்பரப்பில் மீண்டும் மனிதர்கள் இறங்கும் மிஷனுக்கு - வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.

