தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஏற்கனவே கட்சியின் தலைவர் விஜய் புதுச்சேரி, திருச்சி, பெரம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.இந்நிலையில், கோபிச்செட்டிபாளையம் தொகுதி த.வெ.க வேட்பாளர் செங்கோட்டையன், திருச்செங்கோடு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், த.வெ.கவின் விசில் சின்னத்தைப் பற்றி சுவாரசியமாக விளக்கினார்.செங்கோட்டையன் பேசுகையில், "விசில் சின்னம் தான் இந்தியாவை நாளை ஆளப் போகிறது. குழந்தைக்கு சளி பிடித்திருந்தால், விசில் ஊதினால் போதும், சளி நின்றுவிடும்.
அதைப்போல, முதியவர்கள் விசில் அடித்தால் இதயம் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்து விடும். வயதானவர்களுக்கு மூச்சுப் பயிற்சி வேண்டும் என்பார்கள். நல்ல பெரிய விசிலை கொடுத்து ஊதச் சொன்னால் இதயம் நன்றாக Pumping ஆகிவிடும்" என்று உரக்கப் பேசினார்.இந்தப் பிரச்சாரத்தில் செங்கோட்டையன், விசில் சின்னத்தின் மூலம் மக்களுக்கு புதிய நம்பிக்கையும், ஆரோக்கியமான மாற்றத்தையும் கொண்டு வருவோம் என்று வலியுறுத்தினார். த.வெ.கவின் தீவிர பிரச்சாரம் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

