சென்னை : தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமையவிருக்கும் நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
த.வெ.க ஆட்சிக்கு தி.மு.க எந்தவித இடையூறும் செய்யாது என்றும், அரசியலமைப்பு நெருக்கடியையோ புதிய தேர்தலையோ தான் விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
அவர்கள் ஆட்சி அமைக்கட்டும், ஆறு மாதங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்று அவர் கூறினார். Times of India ஆங்கில நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் இந்தக் கருத்துகளை ஸ்டாலின் வெளிப்படுத்தினார்.மேலும், த.வெ.க ஆட்சி தி.மு.கவின் முக்கிய நலத்திட்டங்களைத் தொடர வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார். குறிப்பாக மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் மற்றும் பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (மாதம் ரூ.1,000) ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று அவர் கோரினார்.
விஜய் வாக்குறுதி அளித்த மாதம் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றுவது கடினம் என்றும், குறைந்தபட்சம் ரூ.1,000 என்ற அளவிலாவது தி.மு.க அளித்த தொகையைத் தொடர வேண்டும் என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
த.வெ.க வாக்குறுதி அளித்த ஒவ்வொரு ரேஷன் கார்டு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ஆறு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் என்ற திட்டத்தைப் பற்றி கேள்வி எழுப்பிய ஸ்டாலின், "செஞ்சால் மகிழ்ச்சி" என்று கூறினார்.
தி.மு.க 2021 தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றியதாகவும், NEET ஒழிப்பு போன்ற சில வாக்குறுதிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நிறைவேற்ற முடியவில்லை என்றும் அவர் விளக்கினார்.
தேர்தலில் தி.மு.க 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ள நிலையில், ஸ்டாலின் தனது இல்லத்தில் புதன்கிழமை முதல் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரைச் சந்தித்து வருகிறார். தேர்தல் தோல்விக்குப் பிறகு அவர் முதல் முறையாக ஊடகத்துக்கு பேட்டி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

