சென்னை : சர்வதேச உழைப்பாளர்களின் திருநாளான மே தினத்தையொட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் அமைந்துள்ள மே தின நினைவுச் சின்னத்திற்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மே 1, 2026) மலரஞ்சலி செலுத்தினார்.சிவப்பு சீருடையில் வந்த முதலமைச்சர் ஸ்டாலின், நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு நடைபெற்ற விழாவில் பேசிய அவர், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று உறுதியளித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில்,"சென்னையில் இந்த மே தின நினைவு பூங்காவை உருவாக்கித் தந்தவரும், இங்குள்ள நினைவுச் சின்னத்தை எப்படி அமைக்க வேண்டும் என்று பல முறை நேரடியாக வந்து பார்வையிட்டு, தேவையான திருத்தங்களைச் செய்து உருவாக்கித் தந்தவரும் நமது தலைவர் கலைஞர்தான்.
தொழிலாளர்கள் மீதும், அவர்களின் உரிமைகள் மீதும் கலைஞர் வைத்திருந்த அளவற்ற நம்பிக்கைக்கு பாத்திரமாக, நான் மட்டுமல்ல... நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம், பணியாற்றுவோம்.தொழிலாளர் தினத்தை ஒட்டி, நமது உழைப்பின் பலன் வரும் மே 4ஆம் தேதி கிடைக்க இருக்கிறது. அதில் துளி அளவும் மாற்றம் இல்லை. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடரும். வெற்றி உறுதி என்பதை எந்த கருத்துக் கணிப்பையும் வைத்து சொல்லவில்லை... கள நிலவரத்தை வைத்து சொல்கிறேன்" என்று உறுதியுடன் பேசினார்.
மே தின நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்திய பிறகு, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க திமுக அரசு தொடர்ந்து உறுதியாக இருக்கும் என்றும், தொழிலாளர் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.இந்த நிகழ்வில் திமுக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

