சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 34.92% வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதிக வாக்கு சதவீதத்துடன் முதலிடம் பெற்ற தவெக, 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளது.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் பிற கட்சிகளின் ஆதரவைப் பெற்று பெரும்பான்மையை (118) நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும், ஊகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன் இந்த முடிவுகள் குறித்து விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது"விசிக கணித்தபடியே தற்போது சட்டமன்றத்தில் தொங்கு நிலை உருவாகியுள்ளது. 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்கிற வகையில், தவெகவை தனித்து ஆட்சியமைக்க விடாமல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அதிர்ச்சியாக இருந்தாலும், சாதிய, மதவாத சங் பரிவார் கூட்டணியை வெகுவாக புறக்கணித்துள்ளனர் என்பது எங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
விசிக முன்மொழிந்த கூட்டணி ஆட்சியை வழிமொழிந்த மக்களுக்கு நன்றி. ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை மக்கள் வழங்காதது, நுட்பமான அரசியல் கூட்டணி ஆட்சியையே தமிழ்நாட்டு மக்கள் விரும்புவதை தேர்தல் முடிவு உணர்த்துகிறது." எனவும் தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர் " தவெக 108 இடங்களுடன் நின்றுள்ள நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை எந்தக் கட்சியிடம் கோரப் போகிறது என்பது இப்போது முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது. திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கோருமா அல்லது நேரடியாக அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்துமா என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும் என்றார்.

