ஜேவிபி இனவாதம் இல்லை என்று பேசிக்கொண்டு ஒரு இனவாத தரப்பை மிக பலமான ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கு மறைமுகமாக உதவுகிறது என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறை பேராசிரியர் கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்கள் எல்லா வகையான தளத்திலும் கபளீகரம் செய்யப்படுகிறார்கள் எனவும் ஈழ தமிழர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு ஆரோக்கியமான அரசியல் இருப்பு இல்லை என்ற ஒரு தேக்க நிலைக்குள் அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அநுராதபுர சந்திப்பை பார்க்கின்ற போது தமிழ் மக்களை பொறுத்தவரையில் அச்சப்பட வேண்டிய ஒரு சூழலுக்குள்ளே தான் இருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் பொதுஜன பெரமுனவினுடைய வேட்பாளர் யாராவது ஜனாதிபதியாக வருவதற்குரிய வாய்ப்பை அதீதமாக கொண்டிருக்கின்ற ஒரு இருப்பு தென்னிலங்கையில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இலங்கை தீவை பொறுத்தவரையில் இந்த மேல்தட்டு வர்க்கத்தினுடைய அரசியல் நலன்களுக்குள்ளால் தான் அது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
ஜேவிபி இனவாதம் இல்லை என்று பேசிக்கொண்டு ஒரு இனவாத தரப்பை மிக பலமான ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கு அது மறைமுகமாக உதவுகிறது. இலங்கையை பொறுத்தவரையில் எதிர் துருவங்கள் ஒன்று என்ற ஒன்று கிடையாது.
அதுவும் குறிப்பாக இலங்கை தமிழருக்கு எதிரான ஒரு அரசியலை அவர்கள் நகர்த்துகின்ற போது அவர்கள் ஒருபோதும் எதிர் துருவங்களாக தங்களை காட்டிக் கொள்ளவில்லை." என தெரிவித்தார்.

