யாழ்ப்பாணம் - வசாவிளான் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வசாவிளான் மக்கள் இன்று (20) நான்காவது வாரமாகவும் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமது பூர்வீக நிலங்களை இழந்த மக்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் குற்றச்சாட்டு
புதிய அரசாங்கம் பொது மக்களின் காணிகள் பொதுமக்களுக்கே வழங்கப்படும் என வாக்குறுதிகளை வழங்கிய போதும் இதுவரை அவ்வித நடவடிக்கை முன்னெடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.

தற்போது அனுமதி இன்றி மிகப்பெரிய அளவில் இராணுவத்தின் வைத்தியசாலை அமைக்கப்பட்டு வருவதாகவும் அது பொது மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தநிலையில் தமது காணிகளை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


