Dailyhunt
இஷாரா செவ்வந்தியின் பிறந்த நாள் கேக் விவகாரம் : தொடரும் விசேட விசாரணை

இஷாரா செவ்வந்தியின் பிறந்த நாள் கேக் விவகாரம் : தொடரும் விசேட விசாரணை

திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினரான கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு வழங்கப்பட்ட பிறந்தநாள் கேக் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க முன்னிலையில் சில முக்கிய தகவல்களை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், கணேமுல்லே சஞ்சீவ கொலை வழக்கின் 15ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

அரச இரசாயன பகுப்பாய்வாளர்

கடந்த மார்ச் 29ஆம் திகதி இவரது பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு கேக் ஒன்று கிடைத்த நிலையில் குறித்த கேக்கில் ஏதேனும் விஷ இரசாயனங்கள் அல்லது போதைப்பொருள் கலக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த காவல்துறையினர், குறித்த கேக்கை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைத்து அறிக்கை பெறுவதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோரினர்.

சந்தேகத்துக்குரிய கேக்கை உடனடியாக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட மேலதிக நீதவான், இது தொடர்பான விசாரணை அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் காவல்துறைக்கு கட்டளையிட்டார்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல்

முதலில் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை தற்போது மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இவருடன் தொடர்புடைய விசாரணைகளை விரைவுபடுத்தி, இவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் கடந்த வாரம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil