Dailyhunt
ஜனாதிபதியின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்து செய்தி

ஜனாதிபதியின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்து செய்தி

யேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த உன்னத நிகழ்வான உயிர்த்த ஞாயிறு தினத்தை இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவ மக்கள் அனுஷ்டித்து வருகின்றனர்.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் , "உயிர்த்த ஞாயிறு என்பது வெறும் மத நிகழ்வு மட்டுமல்ல, அது மனிதாபிமானம், அன்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை உலகிற்கு மீண்டும் நினைவூட்டும் ஒரு கலாசார பண்டிகையாகும்.

அமைதியை நோக்கிய பாதை மலர வேண்டும்

உறுதியான அர்ப்பணிப்பு இருந்தால், இருளை வென்று ஒளியையும், பயத்தை வென்று நம்பிக்கையையும் அடைய முடியும் என்பதை இயேசுவின் வாழ்வு நிரூபித்துள்ளது.

தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள். பகைமையை விடுத்து, அமைதியையும் சகவாழ்வையுமே மக்கள் விரும்புகின்றனர். இந்த உன்னதமான தினத்தில் அமைதியை நோக்கிய பாதை மலர வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

இலங்கை மக்கள் அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள அவர், அன்பு, பொறுமை மற்றும் மன்னிப்பு ஆகிய குணங்களால் இதயங்களை நிரப்பி, ஒரே தாயின் பிள்ளைகளாக, ஒரே நாட்டு குடும்பமாக முன்னோக்கிச் செல்ல சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்.

துயருற்ற மக்களின் இரட்சிப்பிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்த இயேசுவின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் கருணையும் அமைதியும் நிறைந்த உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துகள்" என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil