Dailyhunt
கடற்றொழிலாளர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

கடற்றொழிலாளர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை கடற்றொழிலாளர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்கத்தின் மீன்பிடி கொள்கை முன்மொழிவுகளுக்கு அமைய, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் இந்த விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கடற்றொழிலாளர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களின் கீழ் இந்த காப்புறுதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்களுக்கு உயிரிழப்பு

மீன்பிடி நடவடிக்கைகளின் போது கடற்றொழிலாளர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால், தெரிவு செய்யப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் பின்வரும் இழப்பீடுகள் வழங்கப்படும்.

அதன்படி, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டிற்காக கடற்றொழிலாளர் ஆண்டுக்கு 1,920 ரூபாயும், 15 இலட்சம் ரூபாய் இழப்பீட்டிற்காக ஆண்டு சந்தாவாக 2,550 ரூபாயும், அதிகபட்ச இழப்பீடான 20 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை பெறுவதற்கு ஆண்டுக்கு 3,600 ரூபாயும் செலுத்தப்பட வேண்டும்.

இதேவேளை உயிரிழப்புகளுக்கு மட்டுமன்றி, தொழில் ரீதியாக எதிர்கொள்ளும் ஏனைய சவால்களுக்கும் இத்திட்டம் உதவியாக அமையும் என சபை தெரிவித்துள்ளது.

காணாமல் போகும் சந்தர்ப்பங்கள்

அந்தவகையில், விபத்துகளால் நிரந்தர அல்லது தற்காலிகமாக ஏற்படும் இயலாமை சந்தர்ப்பங்களில் உரிய நிதி உதவி வழங்கப்படும்.

சிகிச்சையின் காரணமாக தொழிலுக்குச் செல்ல முடியாத காலப்பகுதியில் ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட நிதி உதவி அளிக்கப்படும்.

கடலில் மீன்பிடி நடவடிக்கைகளின் போது கடற்றொழிலாளர்கள் காணாமல் போகும் சந்தர்ப்பங்களிலும் இந்த காப்புறுதிப் பலன்கள் வழங்கப்படும்.

இந்தநிலையில், கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பொருளாதார எதிர்காலத்தை உறுதி செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil