காசாவில் ஹமாஸின் மூத்த உளவுத்துறை அதிகாரியான இயாத் அகமது அப்துல் ரஹ்மான் ஷம்பாரியைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) புதன்கிழமை (29)அறிவித்தன.
ஒக்டோபர் 7 தாக்குதல் உட்பட, இஸ்ரேலுக்கு எதிரான முக்கிய தாக்குதல்களைத் திட்டமிட உதவியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
வடக்கு காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளும் ஷின் பெட்டும் இணைந்து செவ்வாயன்று (28)நடத்திய தாக்குதலில் ஷம்பாரி கொல்லப்பட்டார்.
காரில் சென்ற போது ட்ரோன் தாக்குதல்
காசாவில், அல் ரிமால் குடியிருப்பு பகுதியில் காரில் சென்ற போது, இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில், அவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்; ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் தகவலின்படி, ஷம்பாரி ஹமாஸின் இராணுவ உளவுப் பிரிவின் மூத்த உறுப்பினராக இருந்தார். காசாவில் செயல்பாட்டுத் திட்டமிடல் மற்றும் உளவுப் பணிகளை அவர் மேற்பார்வையிட்டார்.
இஸ்ரேலியப் படைகள் குறித்த தகவல்களைச் சேகரிக்க அவர் உதவினார், பின்னர் அந்தத் தகவல்கள் இஸ்ரேலிய படைகளுக்கு எதிரான தாக்குதல்களைத் திட்டமிடப் பயன்படுத்தப்பட்டன.
ஒக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் திட்டமிடுவதிலும் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

