Dailyhunt
ஒரே இரவில் அழிவு - ட்ரம்ப்பின் எச்சரிக்கை ஒரு மாயை - ஈரான் கடும் பதிலடி

ஒரே இரவில் அழிவு - ட்ரம்ப்பின் எச்சரிக்கை ஒரு மாயை - ஈரான் கடும் பதிலடி

புதிய இணைப்பு

டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள போர் எச்சரிக்கைகள் வெறும் "மாயை" (Delusional) என ஈரானின் உயர்மட்ட கூட்டு ராணுவ கட்டளைப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய அரச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, காதம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) மத்திய தலைமையகத்தின் ஊடகப் பேச்சாளர் இது குறித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,"அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அச்சுறுத்தல்கள், பிராந்தியத்தில் அமெரிக்கா சந்தித்துள்ள 'அவமானம் மற்றும் இழிவை' ஈடுசெய்யப் போவதில்லை." என தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

புதன்கிழமை காலை 10 மணிக்குள் (AEST) எந்த ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால், ஈரான் "முழு நாடும் அழிக்கப்படும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஒரே இரவில் ஈரானை வீழ்த்தி விட முடியும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த அழிவு

ஈரானின் பாலங்கள் மற்றும் மின்சார உற்பத்தி நிலையங்களை நான்கு மணிநேரத்திற்குள் அழிப்பதற்கான திட்டம் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பது தொடர்பாக அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடுவுக்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் இது நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த ஒட்டுமொத்த அழிவு நடவடிக்கையும் வெறும் நான்கு மணிநேர காலப்பகுதியில் அரங்கேறும் என அவர் சுட்டிக்காட்டினார்.

நடவடிக்கை மிகவும் பயங்கரமானது

சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தில் இருந்த இராணுவ வீரரை மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அவர் விரிவாக விளக்கமளித்தார்.

அந்த நடவடிக்கை மிகவும் பயங்கரமானது என்றும், அதில் உயிரைப் பணயம் வைத்துச் செயற்பட்ட வீரர்களுக்குத் தனது மரியாதையைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, மத்திய கிழக்கின் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முன்வைக்கப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஈரான் நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானால் முன்வைக்கப்பட்ட இந்த போர் நிறுத்த யோசனைக்கு ஈரான் உத்தியோகபூர்வமாகப் பதிலளித்துள்ளதுடன், தற்காலிகப் போர் நிறுத்தத்திற்குப் பதிலாகப் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

இதற்காக ஈரான் 10 அம்சங்களைக் கொண்ட கோரிக்கை அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil