Dailyhunt
சித்த வைத்தியர்கள் சுகாதார அமைச்சரிடம் பகிரங்க கோரிக்கை

சித்த வைத்தியர்கள் சுகாதார அமைச்சரிடம் பகிரங்க கோரிக்கை

GMOA வைத்திய சேவை வழங்க முடியாத சூழலில் சித்த வைத்தியர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சரிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரச சேவையில் நியமனம் எதிர்பார்த்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் சித்த வைத்தியர்கள் வெளியிட்ட விசேட அறிக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "அரச சேவையில் நியமனம் எதிர்பார்த்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் சித்த வைத்தியர்கள், சுகாதார அமைச்சரிடம் தங்களது கோரிக்கைகளை பகிரங்கமாகவும் சவாலாகவும் முன்வைத்துள்ளனர்.

அலோபதி மருத்துவர்களுக்கு நியமனம்

தற்போதைய அரசு சுதேச வைத்திய சேவைகளை புறக்கணித்து, அலோபதி வைத்தியத்தை மட்டுமே முக்கிய சுகாதார சேவையாகக் கருதுகிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த அலோபதி வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் நடைமுறைச்சிக்கல் என்று நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு என்று ஒருபுறம் இருக்க, பல வருடங்களுக்கு முன் உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த சித்த, ஆயுர்வேத மற்றும் யுனானி வைத்தியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக அரச சேவையில் இணைக்கப்படாமல் இருப்பது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சுதேச வைத்தியமும் சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் ஒரு முக்கிய துறையாகும் என்பதால், அதற்கெதிரான பாகுபாட்டை நிறுத்துமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தடுப்பூசி சேவையைத் தவிர, பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை வழங்கும் திறன் சுதேச வைத்தியர்களிடம் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், நியாயமான காரணங்கள் இருந்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அலோபதிவைத்தியர்களிடம் தெரிவிக்கும் சுகாதார அமைச்சு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தங்களைச் சந்திக்க நேரம் வழங்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் மூலமும் கடிதம் அனுப்பப்பட்ட போதிலும் இதுவரை சந்திப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ துறையில் அதிக கவனம்

முன்னாள் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண அவர்களின் காலத்தில், பொதுமக்களுக்கும் அமைச்சரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு இருந்தது என்றும், தற்போதைய சூழலில் அந்த அணுகுமுறை காணப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சு என்பது மிகப் பெரிய பொறுப்புடைய அமைச்சாகும். ஆகையால், அமைச்சரவை பேச்சாளர் போன்ற பல பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்து, குறிப்பாக இதுவரை போதிய கவனம் பெறாத சுதேச வைத்திய துறையில் அதிக கவனம் செலுத்துமாறு அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"நாட்டுக்கு சேவை செய்ய நாம் 7 ஆண்டுகளாக காத்திருக்கிறோம். வைத்தியம் என்பது தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய துறை.

இது எமது நாட்டின் தோல்வியாகும். GMOA வைத்தியர்கள் சேவை வழங்க முடியாத சூழலில், 7 வருடமாக காத்திருக்கும் எம்மை பயன்படுத்திக்கொள்ளலாம்" என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil