பொதுவாக முஸ்லிம் பெண்கள் அணியும் 'நிகாப்' மற்றும் 'புர்கா' என்று அழைக்கப்படுகின்ற முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளுக்கு சுவிஸ் அரசாங்கம் தடை விதித்துள்ளது.இது தொடர்பாக நேற்றைய தினம் சுவிட்சலாந்தின் 26 மாநிலங்களிலும் நடைபெற்ற கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் 51.21 வீதமானவர்கள் முகத்தை மறைப்பதற்கு எதிராக வாக்களித்ததைத் தொடர்ந்து, இந்த தடை நடைமுறைக்கு வந்துள்ளது.இந்த புதிய நடைமுறையின்படி, தெருக்கள், உணவகங்கள், அரச அலுவலகங்கள், பொதுப் போக்குவரத்துக்கள் போன்றவற்றில் முகத்தை முழுவதுமாக மறைத்தபடி யாரும் பயணம் செய்யமுடியாது.வணக்கஸ்தலங்கள் மற்றும் மருத்துவ தேவைக்காக முகத்தை மறைத்தல் போன்றனவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.நேற்று நாடு முழுவதும் நடைபெற்ற கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பானது, முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் தொடர்பான வாக்கெடுப்பு என்று குறிப்பிடப்படாவிட்டாலும், மறைமுகமாக அந்த ஆடைக்கு எதிரான வாக்கெடுப்பாகவே நோக்கர்களால் பார்க்கப்படுகின்றது.இந்தப் புதிய தடைச்சட்டத்தின் பிரகாரம், சுவிட்சலாந்துக்குள் வரும் உல்லாசப் பயணிகள் கூட முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணியமுடியாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஐரோப்பாவில் நெதன்லாந்து, பல்கேரியா, டென்மார்க், ஒஸ்ரியா போன்ற நாடுகள் ஏற்கனவே முகத்தை முழுவதுமாக மறைக்கும் 'நிகாப்' ஆடைக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளிலும் 'நிகாப்' ஆடைக்கான தடை பற்றி பாரிய அளவில் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

