Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி கார் விபத்தில் பலி - அதிர்ச்சியில் திரையுலகம்

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி கார் விபத்தில் பலி - அதிர்ச்சியில் திரையுலகம்

தென்னிந்தியத் திரையுலகின் வெற்றித் தயாரிப்பாளர் என்றும் குறிப்பிடப்படும் ஆர்.பி. சௌத்ரி கோரமான கார் விபத்தில் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவருடைய மறைவு செய்தி ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த விபத்து ராஜஸ்தானின் பியாவர் (Beawar) மாவட்டத்தில் உள்ள ஜூன்டா (Joontha) கிராமத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

குறுக்கே கால்நடைகள்

சவுத்ரி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு ஒரு திருமணத்திற்காக சென்றுள்ளார். தேசிய நெடுஞ்சாலையில் இவர்களது கார் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாகச் சாலைக்குக் குறுக்கே கால்நடைகள் திடீரென வந்துள்ளன.

கால்நடைகளின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் காரைத் திருப்ப முயன்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரில் பலமாக மோதியது.

இந்த விபத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், காரின் முன்பகுதி முழுமையாகச் சிதைந்தது. இதில் பலத்த காயமடைந்த ஆர்.பி. சௌத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் பயணித்த மருமகன் மற்றும் ஓட்டுநர் கௌதம் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றுஅவரது உடல் விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

சூப்பர் குட் பிலிம்ஸ்

இதேவேளை, ராஜஸ்தானை பூர்விகமாக கொண்டவர் ஆர்பி சவுத்ரி. சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 90க்கும் அதிகமான படங்களை தயாரித்துள்ளார்.

தமிழில் இவர் தயாரித்த முதல் படம் 'புது வசந்தம்'. தற்போது விஷால் நடிப்பில் 99வது படமாக மகுடம் படத்தை தயாரிக்கின்றனர். விரைவில் இவர்களது தயாரிப்பில் 100வது படம் உருவாக உள்ளது.

நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்தவர் சவுத்ரி. அதேப்போல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் படங்கள் தயாரிப்பு மட்டுமின்றி நிறைய படங்களை விநியோகமும் செய்துள்ளார்.

சவுத்ரியின் மகன்களான ஜித்தன் ரமேஷ், ஜீவா ஆகியோரும் தமிழ் சினிமாவில் நடிகராக உள்ளனர். தந்தையின் மறைவுச் செய்தியைக் கேட்டு நடிகர் ஜீவா தேம்பித் தழுதழுத்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil