Dailyhunt
ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா... சென்னையிலும்...

ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா... சென்னையிலும்...

Kalki Online 8 months ago

16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று அற்புதங்கள் வேளாங்கண்ணியில் தூய ஆரோக்கிய அன்னையின் ஆலயம் அமைய காரணமாக அமைந்தன.

இங்கே

  • ஆரோக்கிய அன்னை இடைச்சிறுவனுக்கு காட்சியளித்தார்,

  • தயிர் விற்ற முடவன் நலம் பெற்று நடக்க உதவினார்,

  • ஒரு கடும் புயலில் நடுக்கடலில் தத்தளித்த போர்த்துகீசிய மாலுமிக்கு கரை வந்தடைய உதவி புரிந்தார்.

அந்த மாலுமி அன்னைக்கு தன் நன்றியை தெரிவிக்கும் வகையில் அந்த இடத்தில் ஒரு ஆலயம் எழுப்பினார். இந்த ஆலயம் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டத்தில் அமைந்த வேளாங்கண்ணி பேரூராட்சியிலுள்ள கத்தோலிக்க திருத்தலமாகும்.

இந்த ஆலயம் பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் உள்ள பேராலய வடிவில் கட்டப்பட்டது. இயேசுவின் தாயான மரியா உலகின் பல நாடுகளில் வாழும் மக்களிடையே தோன்றி இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் தோன்றிய இடங்களின் பெயரால் அவர் லூர்து மாதா, பாத்திமா மாதா, குவாடலூப்பே மாதா என்று பல பெயர்களால் வழங்கப்படுகிறார். அன்னை மரியா தமிழகத்தின் வேளாங்கண்ணியில் காட்சிஅளித்ததால் வேளாங்கண்ணி மாதா என்றழைக்கப்படுகிறார். இவரிடம் பிரார்த்தனை செய்து கொள்ளும் அனைத்து மக்களின் உடல், உள்ளக் குறைகளைத் தீர்ப்பதால் ஆரோக்கிய அன்னை எனவும் வழங்கப்படுகிறார்.

இத்திருத்தலம் தோன்றிய ஆண்டு முதல் ஆண்டுதோறும் வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா ஆகஸ்ட் 29 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி செப்டம்பர் 8-ம் தேதி அன்று தேர்த் திருவிழாவுடன் முடிவடைகிறது. இத்திருவிழாவின் போது பல்வேறு மொழிகளில் சிறப்பு பிரார்த்தனைகள், மற்றும் ஜெபமாலை அமர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்தத் திருவிழாவில் கத்தோலிக்கர்கள் மட்டுமின்றி எல்லா மதங்களையும் சேர்ந்த பக்தர்களும் பங்கேற்று அன்னை மரியாவுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்து கொள்கிறார்கள். பக்தர்கள் அன்னை மரியாவிடம் பிரார்த்தனைகள் செய்து காணிக்கைகளும் வழங்குகிறார்கள். 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான யாத்ரிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சென்னையில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயம் பெசன்ட் நகரில் உள்ள பிரபலமான எலியட்ஸ் கடற்கரையில் அமைந்துள்ளது. இது சென்னை நகரத்தின் முக்கியமான நினைவு சின்னங்களில் ஒன்றாக உள்ளது.

அன்னை மரியாளின் ஆசிகளைப் பெற ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இந்த தேவாலயத்திற்கு வருகிறார்கள். பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயம் கிறிஸ்துவர்களுக்கு மிகப் புனிதமானதொரு ஆலயமாகும். பல்வேறு மதங்களை சேர்ந்த பல பக்தர்கள் இந்த தேவாலயத்திற்கு அடிக்கடி சென்று அன்னை மரியாளை வணங்குகிறார்கள். இந்த தேவாலயம் 'புனித ஆரோக்கிய மாதா தேவாலயம்' என்று பிரபலமாக அறியப்படுகிறது. இங்கே மக்கள் மெழுகுவர்த்திகள், பூக்கள், மாலைகள் ஆகியவற்றை காணிக்கையாக வழங்குகிறார்கள்.

தேவாலய வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் அன்னை மேரியின் அற்புதங்களை பற்றிய பல்வேறு கட்டுரைகள் உள்ளன. இந்த அருங்காட்சியகம் கடந்த 25 ஆண்டுகளாக உள்ளது. தேவாலய வளாகத்தில் உள்ள ஸ்டாலில் பிரார்த்தனை புத்தகங்கள், ஸ்டிக்கர்கள், ஜெபமாலை, நாட்காட்டிகள், அன்னை மரியாளின் திருவுருவச்சிலைகள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு 1981 ஆண்டு ஒரு திருமணக் கூடம் நிறுவப்பட்டு அதில் திருமண வரவேற்புகள் மற்றும் ஏதேனும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

நாகப்பட்டினம் வேளாங்கண்ணி அன்னை ஆலயம் போலவே இங்கேயும் ஆகஸ்ட் 29-ம்தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து தேவாமாதாவின் பிறந்தநாளான செப்டம்பர் 8-ம் தேதியன்று தேர்த் திருவிழாவுடன் முடிவடையும். 9 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.எண்ணற்ற பக்தர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்று வேளாங்கண்ணி மாதாவின் திருவருளைப் பெறுகிறார்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online