Dailyhunt
அலுவலகத்தில் அதிக நண்பர்களைப் பெறுவது எப்படி?

அலுவலகத்தில் அதிக நண்பர்களைப் பெறுவது எப்படி?

Kalki Online 1 year ago

முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய நண்பர்களை பெற்றிருக்கும் பெரும்பான்மையான நபர்கள் பணியிடத்தில் மிகக் குறைந்த நண்பர்களையே பெற்றிருக்கிறார்கள்.

இதற்கு காரணம் சக மனிதர்களிடையே நல்லுறவை வளர்ப்பதற்கான உத்திகளை அவர்கள் சரிவர தெரிந்து கொள்ளாததால்தான். இந்தப் பதிவில் சக பணியாளர்களிடம் இணக்கமாக நடந்து நிறைய நண்பர்களை பெறுவது எப்படி என்கிற உத்திகளைப் பற்றி பார்ப்போம்.

பாராட்டும் பண்பு;

ஊழியர்கள் ஒருவருக்கொருவர் மனம்விட்டு பாராட்டும் பண்பை வளர்த்துக் கொள்ளவேண்டும். தனது பணியை சிறப்பாக செய்யும் ஊழியரை மேலதிகாரி மட்டும்தான் பாராட்ட வேண்டும் என்பதில்லை. தன் சக ஊழியரை மனம் திறந்து பாராட்டும்போது அவருக்கு உங்கள் மீது மரியாதையும் அன்பும் ஏற்படும். எல்லா மனிதர்களுமே ஏங்குவது அங்கீகாரத்திற்காகவும் பாராட்டிற்காகவும் தான். அதை முழு மனதோடு தரும்போது அவர்களது மனம் மகிழும். மிக விரைவில் உங்களது நண்பராக ஆகிவிடுவார்.

நேரம் செலவழித்தல்;

வேலை நேரம் முடிந்ததற்கு பிறகு சில நிமிடங்கள் அலுவலக நண்பர்களுடன் செலவழிக்க வேண்டும். ஏனென்றால் பகலில் பணி நேரத்தின்போது அவரவர் தமது கடமைகளை செய்வதில் மூழ்கி இருப்பார்கள். அப்போது நட்பை வளர்க்க சந்தர்ப்பம் அமையாது. வேலை முடிந்ததும் மாலையில் உடனே வீட்டிற்கு கிளம்புவதற்கு தயாராகாமல் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்கள் மனம் விட்டு பேசும்போது இறுக்கம் குறைந்து இணக்கம் உருவாகும். மதிய உணவு இடைவேளையின்போது தனியாக அமர்ந்து உண்ணாமல், நண்பர்களுடன் சேர்ந்து உண்ணும்போது நட்பு வலுப்பெறும்.

முழுமையான ஒத்துழைப்பு;

அலுவலக வேலைகளில் முழுமையான ஒத்துழைப்பை ஒவ்வொரு ஊழியரும் தரவேண்டும். தன்னுடைய துறை இல்லாவிட்டாலும் கூட பிறருக்கு அதில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்வதற்குத் தயங்க கூடாது. திறந்த மனதோடு அவர்களுக்கு உதவி செய்தால் அவர்கள் மனதில் இடம் பிடிக்கலாம். ஒரு குழுப் பணியை அனைவரும் ஒத்த மனதுடன் சிறப்பாக செய்து ஒத்துழைப்பு தரும்போது அந்த வேலையும் சிறப்பாக அமையும், விரைவாகவும் முடியும். மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும்.

வறுமை வளர்ச்சிக்கு தடை அல்ல!

உணர்ச்சி நுண்ணறிவைப் பயன்படுத்துதல்;

உணர்ச்சி நுண்ணறிவு, நட்பு, உறவுகள் மற்றும் குடும்பத்தினரிடையே நல்ல உறவு மேலாண்மையை வளர்ப்பதற்கு உதவும் ஒரு அருமையான

கருவியாகும். எப்போதும் சக ஊழியர்கள் இடையே அனுதாபம், கருணை, அன்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். மனதை காயப்படுத்தும் விதமாக பேசினாலோஅல்லது செயல்பட்டாலோ உடனே உணர்ச்சிவசப்பட்டு பதில் அளிப்பதோ அல்லது அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதோ கூடாது. அதற்குப் பதிலாக உணர்ச்சி நுண்ணுறிவைப் பயன்படுத்தி அவர்கள் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் என்று பொறுமையாக விசாரிக்கும்போது அவர்களுக்கும் தமது தவறு புரியும். பிறர் மேல் தேவையில்லாமல் கோபமோ ஆத்திரமோ பட்டுவிட்டோம் என்று உணர்ந்து கொண்டு அவர்கள் தம்மை மாற்றிக் கொள்வதற்கும் ஏதுவாக அமையும்.

நம்பிக்கை மற்றும் மரியாதை;

ஊழியர்களுக்குள் நல்ல நட்பு உருவானாலும் அடிப்படையான மரியாதையை அவர்களுக்கு தந்தாக வேண்டும். அவர்களது சுயகௌரவம் பாதிக்கப்படாத வகையில் மரியாதையுடன் அவர்களை நடத்தவேண்டும். அதைப்போல அவர்களது நம்பிக்கைக்கு உரியவர்களாக நடந்து கொள்வதும் அவசியம். அவர்களுக்கு தேவைப்படும்போது உதவிகள் செய்வதற்கும் தயாராக இருக்கவேண்டும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online