Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அதிசயங்களின் இருப்பிடம்: தெலங்கானா சாயி பிருந்தாவனம் கோயிலின் ஆன்மீக ரகசியங்கள்!

அதிசயங்களின் இருப்பிடம்: தெலங்கானா சாயி பிருந்தாவனம் கோயிலின் ஆன்மீக ரகசியங்கள்!

Kalki Online 1 day ago

தெலங்கானா ஹைதராபாத்திலிருந்து 30 கிமீ தூரத்தில் ( ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு அருகில்) உள்ள தேஷ்முகி என்ற கிராமத்தில், அமைந்துள்ள ஷீரடி சாயி பிருந்தாவனம் பிரபலமான ஒரு புனித யாத்திரைத் தலமாக்கும்.

சாயிபாபா மீது ஆழ்ந்த நம்பிக்கையும் பக்தியும் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு, இங்கு பாபா ஏதேனும் ஒரு வடிவத்தில் தன்னை வெளிப்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

மனதைக் கவரும் அழகிய தோட்டங்கள், மலைகளால் சூழப்பட்டு, நீரூற்றுகளால் நிறைந்திருக்கும் இந்த இடம், மனதிற்கு அமைதியையும், ஆறுதலையும் தருகிறது. இப்பகுதியில் 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்கள் மற்றும் வன மூலிகைத் தாவரங்கள் உள்ளன. மூன்று முக ருத்ராடச மரத்தின் முன் தியான நிலையில் சிவன் அமர்ந்துள்ள சிலை அனைவரையும் ஈர்க்கிறது.

இக்கோயிலை நிறுவிய ஸ்ரீ கண்ட நாராயண சுவாமிஜிக்குத் தன் கனவில் சாயி பாபா தோன்றுவது போன்ற தரிசனங்கள் ஏற்படத் தொடங்கினவாம். அதன் பிறகு, குருஜி தனது வேலையைத் துறந்து, தன் குருவான சாயி பாபாவின் சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.

சாயி பாபா போதித்த போதனைகள், அறிவுரைகள் மற்றும் தத்துவத்தை நடைமுறைப்படுத்தி, அதன் மூலம் அந்தச் செய்தியைப் பரப்புவதே அவருடைய நோக்கமாக இருந்தது.

ஸ்ரீ கண்ட நாராயண சுவாமிஜியின் உன்னதமான வழிகாட்டுதலின் கீழ் 24 ஆகஸ்ட் 2000 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சாயி பிருந்தாவனம், சாயி பாபாவுக்குப் பிரியமான பல செயல்களான நாமஜெபம் (இரவும் பகலும் இறைவனின் நாமத்தை உச்சரித்தல்), பஜனைகள், துனி பூஜை செய்தல் மற்றும் தானம் (ஏழைகளுக்கும் நலிந்தவர்களுக்கும் உணவு, பணம் அல்லது ஆடை வழங்குதல்) போன்றவற்றின் இருப்பிடமாகத் திகழ்கிறது.

 சாயி பிருந்தாவனம் - Sai Baba Temple Deshmukhi

பக்தர்களின் வருகை அதிகரிக்கவே 2022 ஆம் ஆணடு பழைய கோவிலுக்கு அருகிலேயே பெரிய இடத்தில் சாயிபாபாவின் அழகிய, அருள் பொழியும் உருவ சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது அருகிலேயே ஞானசரஸ்வதி, வெங்கடேஸ்வரர், சத்ய நாராயணர் மற்றும் சிவன் சன்னதிகள் உள்ளன. கோயில் வளாகத்தில் சாயி பாபா பாம்பு புற்றுகளுக்கு இடையே நாகசாயியாக காட்சி தருகிறார். வளாகத்தில் ஒரு பெரிய தியான மண்டபமும் உள்ளது. இக்கோயிலில் கோசாலை ஒன்றும் உள்ளது.

இன்றும் அடிக்கடி, பாபா, குருஜி மூலமாகத் தொடர்பு கொண்டு வழிகாட்டுகிறார்; அவரைச் சந்திக்கச் சென்றவர்கள் ஆச்சரியமும், பரவசமும், மனநிறைவும் அடைவார்கள். இத்தகைய அனுபவங்கள் எண்ணற்றவை. எனக்கும், குருஜியை சந்தித்போது ஆச்சரியம் தந்த அனுபவம் ஏற்பட்டது. அது மிகுந்த ஆறுதலை அளித்தது.

இந்த சாயிபாபா கோயிலின் ஒரு சிறப்பு அம்சம் துனி பூஜை ஆகும். இந்த துனி பூஜையைச் செய்வதன் மூலம் உலகியல் மற்றும் ஆன்மீக விருப்பங்கள் இரண்டும் நிறைவேறுகின்றன என்று சொல்லப்படுகிறது. இரவும் பகலும் 'ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி' என்று இடைவிடாத பஜனைகள் நடைபெறுகின்றன.

நாஞ்சில் பிள்ளையார்பட்டி: குமரியின் சக்தி விநாயகர் கோயில் வரலாற்று சுவாரசியங்கள்!

அனைத்து பக்தர்களுக்கும், ஏழைகளுக்கும், பாபாவின் தரிசனத்திற்காக க்ஷேத்திரத்திற்கு வருபவர்களுக்கும் தினமும் அன்னதானம் . 2000-ஆம் ஆண்டு முதல் சுமார் ஒரு கோடி பக்தர்களுக்கும் மேல் உணவு வழங்கப்பட்டுள்ளது.

விஸ்வ சாந்தி சாயி சேவா & பிரச்சார சமாஜ் என்ற ஒரு அறக்கட்டளை, ஸ்ரீ கண்ட நாராயண சுவாமிஜியின் உன்னதமான வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது. அறக்கட்டளையின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் வளர்ந்து, கோடைகால முகாம்கள், பாதயாத்திரைகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக அமைந்தன.

வீடற்ற மூத்த குடிமக்கள் இங்கு அமைதியான சூழலில் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதோடு மட்டுமல்லாமல், ஆன்மீக ரீதியாகவும் வளரக் கற்றுக் கொள்கிறார்கள்

இங்கு ஏறக்குறைய அனைத்துப் பண்டிகைகளும் அதே கோலாகலத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப் படுகின்றன. இவை தவிர, பாபாவுக்கான தினசரி ஆரத்திகள், பால்கி சேவை, மற்றும் சிலை பிரதிஷ்டை ஆண்டு விழாக்கள் போன்ற சமயங்களில் நடைபெறும் சிறப்புப் பூஜைகள் மற்றும் ஹோமங்கள் ஆகியவை மிகப் பெரிய அளவில் நடத்தப்படுகின்றன. கோயிலுக்கு எதிரே உயரமான அனுமன் சிலை நம்மை பிரமிக்க வைக்கிறது.

"அனைத்து உயிரினங்களும் என்னுடன் ஒனறானவைகளாகும். நான் அவைகளின் உருவத்தில் உலாவிக் கொண்டிருக்கிறேன். என்னை இவ்வனைத்துப் படைப்புயிர்களிலும் பார்க்கிறவன் எனக்கு உகந்தவன்" - ஷீரடி சாயிபாபாவின் அருள்மொழி

'ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி'.

டாக்டரையே வியக்க வைத்த ஷீரடி சாயிபாபாவின் 'உதி' மகிமை: உருக வைக்கும் நிஜ சம்பவங்கள்!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online