Dailyhunt
அயராத பணியே மகிழ்ச்சி!

அயராத பணியே மகிழ்ச்சி!

Kalki Online 1 year ago

ய்வாக இருப்பதே மகிழ்ச்சி என்று எண்ணுபவர்கள் இருக்கிறார்கள். பணிக்கு செல்லும் போதும் பணியிலிருந்து திரும்பும் போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

நம் வாழ்க்கையில் தொடக்கத்திலிருந்தே மகிழ்ச்சி புறக்கணிக்கப்படுகிறது. நம்முடைய செயல்கள் பல பயமுறுத்தலால் தொடங்குகிறது. அச்சப்படுத்தி ஆரம்பிக்கும் படிப்பு துடிப்பாக இல்லாமல் நடிப்பாக நடந்தேறுகிறது. பணி முடியும் போதுதான் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்.

இன்றைய இளைஞர்கள் பணியைத் தரம் பிரிக்கிறார்கள். தகுதியுள்ள பணி தரமற்ற பணி என அவர்களே தராசு களை உருவாக்கிக் கொள்கிறார்கள். தங்களுக்கு அசாதாரண தகுதி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு மற்ற பணிகளை சாதாரண பணி என்றும் அதனால் தங்கள் கௌரவம் சீர்குலைந்து விடும் என எண்ணுகிறார்கள்.

அந்த மயக்கத்திலிருந்து விடுவதற்குள் ஆயுளை கடந்து விடுகிறார்கள். முதல் படியை மிதிக்காமலேயே மாடிக்குப்போக நினைக்கிறார்கள். கடினமான இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடையும்போது ஏற்படும் மகிழ்ச்சி ஜீவநதியைப் போல் நிரந்தரமானது. எதையும் செய்து காட்டுவேன் என்று இளைஞர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள்.

தவறுதலாக செயலாற்றுவதை விட, செயலாற்றாமல் இருப்பது மோசமானது!

ஸ்பெயின் நாட்டுக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் போர் மூண்டது. அப்போது ஒரு முக்கியமான தகவலை க்யூபா நாட்டு போராளிகளின் தலைவனுக்குக் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்க ஜனாதிபதிக்கு ஏற்பட்டது. அந்தப் போராளியின் பெயர் கார்ஷியா. தந்தி தபால் மூலம் அனுப்ப முடியாது. அப்போது அவரிடம் ரோவன் என்ற ஒரு நபர் இருக்கிறார். அவரிடம் கொடுத்தீர்களானால் கார்ஷியாவிடம் கொடுத்துவிடுவார் என்றார். ஜனாதிபதி ரோவனை வரவழைத்தார். கடிதத்தை அவரிடம் கொடுத்து கார்ஷியாவிடம் சேர்க்கச் சொன்னார். மறுப்பேதும் சொல்லலாமல் ரோவன் அந்த கடிதத்தை நன்றாக பசைபோட்டு ஒட்டி அதை தன் மார்பில் தேய்த்து காயவைத்து விடைபெற்றார். நான்கு நாட்கள் இரவும் பகலும் க்யூபாவின் கடற்கரை பகுதிகளில் பயணம் செய்து மூன்று வாரம் கழித்து தீவின் மறுமுனையில் கரையேறினார். எதிரி நாட்டை நடைப்பயணமாகக் கடந்து கார்ஷியாவைக் கண்டுபிடித்து கடிதத்தைக் கொடுத்த பிறகு திரும்பி வந்து ஜனாதிபதிக்கு தெரிவித்தார். இப்படிப்பட்ட அசாத்திய செயலை ரோவன் எப்படி சாதித்தார். புத்தகம் படிப்பதால் இத்தகைய நடைமுறை அறிவு வராது. இன்று நிறுவனங்களுக்கும் நாட்டுக்கும் ரோவன் போன்ற இளைஞர்கள் தேவை.

அலமாரியில் இருக்கும் புத்தகங்களை எடுக்கச் சொன்னால் கூட நூறு கேள்விகளைக் கேட்டு தயங்கியபடி இருக்கும் இளைஞர்களைப் பார்க்கலாம். இன்று திறமையான அதே நேரத்தில் நேர்மையாக பணியாற்றுபவர்களை கண்டுபிடிப்பது சிரமம். அரைகுறையாக பணியை முடிப்பவர்கள் முழுமையான மகிழ்ச்சியுடன் இருக்க முடிவதில்லை. வேலையினால் வரும் அலுப்பு சரியாக செய்யாததால் அவர்கள் மகிழ்ச்சி அடைய முடிவதில்லை.

ஆனால் பணியைச் செய்யும்போது நடனமாடுவது போன்று மகிழ்ச்சியுடன் செய்கிறவர்கள் தங்கள் ஆயுளை அதிகரித்துக் கொள்கிறார்கள். அவர்களால் பயன்பெற்றவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்கள் நெஞ்சம் நிரம்புகிறது. இந்திய இளைஞர்கள் அனைவரும் ரோவனாக மாறினால் பள்ளத்தாக்குகள் இமயமாகும். பாலைவனங்கள் பாற்கடலாகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online