Dailyhunt
அயோத்தியை ஆட்சி செய்த ராமரின் பாதுகை வந்த கதை தெரியுமா?

அயோத்தியை ஆட்சி செய்த ராமரின் பாதுகை வந்த கதை தெரியுமா?

Kalki Online 1 year ago

ராமரின் மீது அளவு கடந்த அன்பை வைத்திருந்த ஒரு பக்தன் உருவாக்கிய பாதுகைதான் அயோத்தியை 14 ஆண்டுகள் ஆட்சிப்புரிந்தது என்றால் ஆச்சர்யமாக உள்ளதல்லவா?

அந்தக் கதையைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

ராமர் சீதாதேவியை திருமணம் செய்துக்கொண்டு நாட்டுக்கு திரும்புகிறார். நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ராமரை வாழ்த்தி விதவிதமான பரிசுகளை அளித்துக் கொண்டிருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் ஆத்மபந்து என்னும் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் கைகளில் ராமருக்கென்றே அளவெடுத்து தைத்ததுபோல அழகான இருபாதுகைகள் இருந்தன.

வரிசையாக ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வந்த விலைமதிப்பற்ற பொருட்களை ராமனுக்கு வழங்கிக் கொண்டிருந்தனர். 'வெறும் பாதுகைகளையா நாம் ராமருக்கு கொடுப்பது?' என்று நினைத்த ஆத்மபந்து திரும்பி செல்ல முற்பட்டான். அதை கவனித்துவிட்ட ராமபிரான் அவரை அழைத்து, 'எனக்காக என்ன பரிசு கொண்டு வந்தீர்கள்?' என்று கேட்டார்.

சற்றே தயக்கத்துடன், தன்னிடமிருந்த பாதுகையை எடுத்து நீட்டினார் ஆத்மபந்து. அதைப் பார்த்து புன்னகைத்த ராமபிரான், 'உண்மையான உழைப்பில் உருவான உங்களுடைய பரிசுதான் இங்கிருக்கும் விலை மதிப்பற்ற பொருட்களையெல்லாம் விட சிறந்தது. மேலும் எனக்கு பிரியமானதும் இதுவே!' என்று ராமர் கூறினார். இதைக் கேட்டு ராமரின் அன்பில் நெகிழ்ந்துப் போனார் ஆத்மபந்து.

ராமர் வனவாசம் சென்றபோது, எதையுமே எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்றாலும், 'இந்த பாதுகையை என்னுடன் எடுத்துச்செல்ல அனுமதியுங்கள்' என்று அனுமதி வேண்டி அதை தன்னுடன் ராமர் எடுத்துச் சென்றார்.

ஜடாமுடியுடன் காட்சித்தரும் முருகன் கோவில் எங்கிருக்கிறது தெரியுமா?

அப்போது அந்த கூட்டத்தில் கண்ணீர் மல்க நின்றுக்கொண்டிருந்த ஆத்மபந்துவிடம் ராமர், 'விலையுயர்ந்த பரிசுகள் எதுவுமே எனக்கு பயன்படவில்லை. நீ அளித்த காலணிகள்தான் என் பாதங்களை காக்கப்போகிறது' என்று கூறினார்.

அத்தகைய உண்மை அன்பினால் உருவாக்கப்பட்ட அந்த பாதுகையை பின்னாளில் பரதனால் கொண்டு செல்லப்பட்டு பதினான்கு ஆண்டுகள் அயோத்தியின் அரியணையில் அமர்ந்து ஆட்சியும் செய்தது. ராமர் ஆண்டால் என்ன ராமர் பாதுகை ஆண்டால் என்ன? ராமரின் உணர்வு மக்களிடையே இருக்கும் வரை தர்மம் காக்கப்படும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online