அடலோஃபோபியா (Atelophobia) என்பது ஒரு வகையான பயம். எந்த ஒரு காரியத்தையும் தவறாக செய்து விடுவோமோ என்று பரிபூரணத்துவத்தை குறித்து ஏற்படும் பயம்.
பயத்தை அங்கீகரிக்கவும்: முதலில் தங்களுக்கு அடலோஃபோபியா இருக்கிறது என்பதை அங்கீகரிக்க வேண்டும். பயத்தைப் புரிந்து கொள்வது தான் அதை நிர்வாகிப்பதற்கான, சரி செய்வதற்கான முதல் படியாகும். அப்போதுதான் இந்த நிலைமையை சீராக்க முடியும்.
நேர்மறை எண்ணங்கள்: ஒரு வேலையை தொடங்கும்போது, 'இதை சரியாக செய்து விடுவோமா? இதை என்னால் சிறப்பாக முடிக்க முடியுமா?' என்கிற தேவையில்லாத பயமும் எதிர்மறை எண்ணமும் எழும்போது மனதிற்குள்ளேயே கேள்வி கேட்க வேண்டும். இந்த பயம் வெறும் யூகத்தினால் எழுந்ததேயன்றி உண்மையல்ல. 'இந்த வேலையை என்னால் திறம்பட செய்து முடிக்க முடியும்' என மனதார பலமுறை சொல்லும்போது அதை செய்யலாம் என்கிற துணிச்சல் வரும்.
சுய இரக்கத்தை பயிற்சி செய்தல்: முதலில் ஒருவர் தன்னிடம் மிகவும் அன்பாக இருக்க வேண்டும். பிறருக்கு வழங்கும் அதே கருணை மற்றும் புரிதலை தனக்குத்தானே ஒருவர் வழங்கிக் கொள்வது மிக அவசியம். மனிதர்கள் எல்லாரிடத்திலும் குறைபாடுகள் உள்ளன. அவர்கள் தவறுகள் செய்வார்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதேபோல, தானும் தவறு செய்ய நேரலாம். இது பெரிய குற்றம் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். யாருமே இந்த உலகில் 100 சதவிகிதம் பரிபூரணமிக்கவர் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தன்னைப் பற்றிய கடுமையான எதிர்மறையான சுய தீர்ப்புகளை வழங்காமல் தவறுகளை செய்தால் அவற்றைத் திருத்திக் கொள்ள முயற்சிகள் எடுக்க வேண்டும்.
யதார்த்தமான இலக்குகள் அமைத்தல்: முதலில் கடினமான இலக்குகளை அமைப்பதை தவிர்த்து விட்டு. இலகுவான யதார்த்தமான இலக்குகளை அமைக்க வேண்டும். செய்யும் வேலைகளை சிறிய நிர்வாகக்கக்கூடிய பணிகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் அப்படி செய்யும் போது தவறுகள் நேராது.
தவறுகள் குற்றங்கள் அல்ல: செய்யும் வேலையில் தவறுகள் ஏற்பட்டால் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படவோ அச்சப்படவோ தேவையில்லை. என்ன தவறு என்பதை கவனமாகப் பார்த்து அதை சரி செய்து கொண்டால் போதும். மேலும், அதை எப்படி சரியாக செய்வது என்பதை கற்றுக்கொண்டு செய்யலாம். தவறுகள் நேரும்போது அது மனித அனுபவத்தில் ஒரு பகுதி என்பதை புரிந்து கொண்டாலே பயம் விலகி விடும்.
இந்தத் தருணத்தில் வாழுதல்: கடந்துபோன பழைய நினைவுகளையும் தவறுகளையும் நினைத்துப் பார்க்காமல் தற்போது செய்யக்கூடிய வேலையை கவனத்துடன் முழு மனதோடு செய்தாலே பயம் வராது. ஆர்வத்தோடு செய்யும்போது அந்த வேலை நன்றாக அமையும்.
தளர்வு நுட்பங்கள்: மூச்சுப் பயிற்சிகள், தியானம் மற்றும் தசை தளர்வு ஆகியவற்றை பயிற்சி செய்தால் அது பயத்தை குறைத்து மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்.
ஒப்பீடு தேவையில்லை: அவர்கள் அப்படி நன்றாக செய்கிறார்கள், இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று தன்னை பிறருடன் ஒப்பீடு செய்வது வேண்டாம். பிறருக்கு எதிராக தன்னை அளவிடுவதை விட தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சாதனையில் கவனம் செலுத்த வேண்டும். தங்களுடைய பலங்களை கொண்டாட வேண்டும். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்பதை மனதில் கொண்டு அதை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட இந்த உத்திகள் அடலோஃபோபியாவை நிர்வாகிக்க உதவும். சமாளிக்க முடியவில்லை என்ற நிபுணரின் உதவியை நாடலாம்.

