Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பேராசை குறையணுமா? ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் பொன்மொழிகள் தரும் தீர்வு!

பேராசை குறையணுமா? ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் பொன்மொழிகள் தரும் தீர்வு!

Kalki Online 1 month ago

"புலன்களைத் திருப்திப் படுத்தல், உலகியல் தரும் அனைத்தையும் பெறுதல், உலோகாயத லாபங்களைச் சேர்த்தல் ஆகியவற்றில் ஏற்படும் சபலங்களைத் தடுத்து நிறுத்துங்கள்.

உங்களின் தேவைகளுக்கு ஒரு எல்லையை வகுத்துக் கொள்ளுங்கள்.

ரகு மஹாராஜான் அரசாண்ட சமயத்தில் ஒரு மாணவன் தன் படிப்பை முடித்துக் கொண்டு தனது குருவிடம் அவர் தனக்கு போதித்த அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அவருக்கு என்ன குரு தக்ஷிணை வேண்டும் என்று கேட்டான். குரு அவனுடைய நன்றியைத் தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று சொன்னார். தான் சொன்னபடி வாழ்ந்து காட்டி தனக்கு கௌரவத்தை ஏற்படுத்தினால் அதுவே போதும் என்றார் குரு. ஆனால் சிஷ்யனோ அவர் தனக்குத் தேவையானதை சொல்லியே ஆக வேண்டும் என்று வற்புறுத்தினான். எவ்வளவு பணம் அல்லது எந்த விதமான பரிசு வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். ஆகவே அவனைத் திருப்திப்படுத்தவும் அவன் தொல்லையிலிருந்து மீளவும் குரு அவனிடம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு தொகையைக் கூறினார்.

 Bhagavan Baba

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!

"நீ என்னிடம் 16 கலைகளைக் கற்றுக் கொண்டாய். ஆகவே எனக்கு 16 லட்சம் தங்கக் காசுகளைத் தா" என்றார் அவர்.

இதைக் கேட்ட சிஷ்யன் அந்தப் பணத்தைச் சேகரிப்பதற்காக ரகு மஹாராஜாவிடம் சென்றான். நீ எது கேட்டாலும் அதைத் தருவேன் என்ற உறுதிமொழியை அவன் மஹாராஜா ரகுவிடம் பெற்றான். பின்னர் பதினாறு லட்சம் தங்கக் காசுகளைத் தருமாறு கேட்டான். இவ்வளவு பெரிய தொகையைக் கேட்ட ராஜா திகைத்தார். சக்கரவர்த்தியாக இருந்தாலும் கூட இவ்வளவு பெரிய தொகை அவரிடம் இல்லை. ஆகவே தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக அவர் செல்வத்தின் அதிபதியான குபேரன் மீது போர் தொடுத்தார். தனக்கு வேண்டிய ஏராளமான தங்கக் காசுகளைக் கொண்டு வந்தார்.

"இதோ இருக்கின்ற அனைத்தையும் எடுத்துக் கொள்; உன் குரு கேட்ட அளவு அவருக்குக் கொடு. மீதியை நீயே வைத்துக் கொள்" என்று ராஜா அவனிடம் கூறினார். ஆனால் சிஷ்யனோ தான் குருவுக்குக் கொடுக்க வேண்டிய தக்ஷிணைத் தொகைக்கு அதிகமாக ஒரு காசு கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

"உனக்காகத் தான் இவ்வளவு செல்வத்தையும் கொண்டு வந்துள்ளேன். எடுத்துக் கொள்" என்று ராஜா வற்புறுத்த அந்த சபலத்திற்கு அடிமையாகாமல் தனக்கு வேண்டியதைப் பெறுவதில் மட்டும் உறுதியாக இருந்தான். அது தான் உண்மையான பேராண்மையாகும்.

'அசந்துஷ்ட: த்விஜோ நஷ்ட:' - திருப்தியில்லாத ஒரு மனிதன் நஷ்டம் அடைந்தவன் போலத் தான்! - என்பது வாக்கு.

இறைவனை நம்பி உனக்கு வருவதை ஏற்றுக் கொள். அவன் உன்னுள்ளே இருக்கிறான்; உன்னுடன் இருக்கிறான். உனக்கு எவ்வளவு எப்போது கொடுக்க வேண்டும் என்பதை அவன் அறிவான். அவன் ப்ரேமை வடிவானவன்.

இதுவே என் தனித்துவம் - ப்ரேமை! ப்ரேமை என்பதே நான் கொண்டு வந்துள்ள விசேஷமான பரிசாகும். என்னுடைய கருணையானது வெளிப்படுத்தப்படும் ஒரு வழியாகும். அதுவே என்னுடைய எல்லாச் செயல்களுக்குமான அடிப்படை. கடவுள் எல்லா உயிர்களிலும் இருக்கிறான் என்று சொல்லப்படுகிறது. ஆம். அவன் ப்ரேமையாக அனைத்திலும் இருக்கிறான். ப்ரேமை இல்லாவிட்டால் உலகமானது துயரத்தின் கூடாரமாகி விடும். அது மீனுக்கு தண்ணீர் போல.

ஒரு தங்கக் கோப்பையில் நவரத்தினங்களைப் போட்டு அதில் மீனை வை; அது உயிருக்குப் போராடி தண்ணீருக்குள் பாயவே போராடும்.

லக்ஷ்மணன் குழந்தையாக இருந்த போது ஓ வென்று அலறி அழலானான். சுமித்ரா குழந்தையை ஏதோ பிசாசு பிடித்திருக்கிறது என்று நினைத்து பயப்பட்டாள். நேராக வசிஷ்டரிடம் ஓடினாள். "கொஞ்சம் விபூதியை குழந்தையின் நெற்றியில் தடவி விடுங்கள். கெட்ட பிசாசு ஓடி விடும்" என்றாள் அவள்.

வசிஷ்டருக்கு லக்ஷ்மணன் அப்படி அழுவதற்கான காரணம் நன்கு தெரியும். அவர் கூறினார் :" குழந்தையை ராமனுக்குப் பக்கத்தில் வையுங்கள். அவனது அழுகை நின்று விடும்."

குழந்தையாக இருந்த போதும் ராமனை விட்டு ஒரு கணமும் லக்ஷ்மணனால் பிரிந்திருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் அதிகமாகத் தேவைப்படும். அதுவே அவருக்குச் சொந்தமான இடமாகும்.

அதனால் தான் விஸ்வாமித்திரர் தன் ஆசிரமத்திற்கு ராமரை அழைத்துச் சென்ற போது லக்ஷ்மணன் ராமரைப் பின் தொடர்ந்து சென்றான்.

பேராசையைத் தவிர்த்து நிறைவான வாழ்வு வாழ்வது எப்படி? - ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரை!

சாதனா என்பது மொத்த விஷயத்தில் நான்கில் ஒரு பங்கு தான். விசாரம் என்பது அடுத்த மூன்று பகுதியாகும். டயபடீஸுக்கு இன்சுலின் ஊசியானது நான்கில் ஒரு பகுதி தான். மற்ற மூன்று பகுதிகள் - உணவுத் திட்டத்தில் கட்டுப்பாடு, உடல்பயிற்சி, மற்றும் உள்ள கட்டுப்பாடுகள். அதே போல நாமஸ்மரணம் என்னும் சாதனையை நான் பரிந்துரைக்கும் போது அதன் கூடவே தொடர்ந்து வரும் இன்னும் இரண்டு துணைச் செயல்களும் உள்ளன.

இறைவனின் நாமத்தைக் கூறும் போது அந்தப் பெயரில் மனமானது நிலைநிறுத்தப்பட வேண்டும். அத்துடன் பாவசுத்தியும் (உணர்வுகளில் தூய்மை) மற்றும் அர்த்தவிசாரணையும் (பெயரில் ஆழ்ந்திருக்கும் அர்த்தத்தில் வாழ்வது) இருக்க வேண்டும். இந்தக் கூட்டு இணைதல் வெற்றியைத் தரும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online