Dailyhunt
பிள்ளை வரம் தரும் திருப்புல்லாணி: ஸ்ரீராமர் வழிபட்ட இக்கோயிலின் மர்மம் என்ன?

பிள்ளை வரம் தரும் திருப்புல்லாணி: ஸ்ரீராமர் வழிபட்ட இக்கோயிலின் மர்மம் என்ன?

Kalki Online 8 months ago

ழலைப்பேறு வேண்டிக் காத்திருக்கும் தம்பதியர் தற்காலத்தில் பெருகி விட்டனர். அவர்களின் கவலையைப் போக்கி, வீட்டில் குழந்தை தவழ வரம் தரும் ஆலயமாக அறியப்படுகிறது திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகந்நாதப் பெருமாள் திருக்கோயில்.

ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராமாயண வரலாறுடன் தொடர்புடைய ஸ்ரீ ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோயில் திருப்புல்லாணி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது 108 திவ்ய தேச கோயில்களில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

ராமேஸ்வரம் திருத்தலத்துக்கு வருகை தருபவர்கள் மகாவிஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோயிலுக்கும் வருகை தந்து வழிபடுகிறார்கள். இந்த பழைமையான கோயில் அதன் புனிதமான ஆன்மிகத் தன்மைக்காக மட்டுமல்லாமல், சுவாரஸ்யமான வரலாற்றுப் பின்னணி மற்றும் அற்புதமான கட்டடக்கலை சிறப்பிற்காகவும் அனைவரையும் ஈர்க்கிறது.

இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் பராமரிக்கப்படுகிறது. எனினும், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு, பாண்டியர் மற்றும் சேதுபதி மன்னர்களின் ஆட்சியின்போது பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன.

பணம், திருமணம், மகிழ்ச்சி, ஆரோக்கியம்: அனைத்தும் கிடைக்க இந்த ஹோமங்கள்தான் வழி!

திராவிடக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டமைப்பு அழகு, காண்போரின் கண்களையும் கருத்தையும் கவர்கிறது. கம்பீரமாகக் காட்சி தரும் 120 அடி உயரம் கொண்ட 8 கோபுர நிலைகளும், தெளிவான நீர் நிரம்பிய சக்கரத் தீர்த்தம் என்று அழைக்கப்படும் குளமும் இந்தக் கோயிலின் முக்கிய அம்சங்களாகும். தமிழ் இதிகாசமான கம்ப ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்புடன் திருமங்கை ஆழ்வார் இந்த ஸ்ரீ ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோயிலைப் பற்றியும் அதன் மகிமையைப் பற்றியும் தனது பாடல்களில் பாடியுள்ளது சிறப்பு.

இராமாயண காலத்தில் ஸ்ரீராமபிரான் சீதா தேவியைத் தேடி, தனது பரிவாரங்களுடன் இந்த இடத்திற்கு வந்தபோது இரவு நேரமாகி விட்டதால் அங்கிருந்த புற்களையே தலைக்கு அணையாக வைத்து ஓய்வு எடுத்ததால் இந்த இடம் புல்லணை என்று அழைக்கப்படுவதாக இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. இருப்பினும், ஸ்ரீ ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோயிலுக்குப் பின்னால் மேலும் பல புராணக் கதைகள் உள்ளன.

எண்ணெய், திரி இல்லாமல் எரியும் தீச்சுடர்: அன்னை பராசக்தியின் அதிசய கோயில்!

ராவணனை எதிர்த்துப் போராட இலங்கைக்குச் செல்லும் வழியில் சமுத்திர ராஜனிடம், இலங்கைக்கு கடல் வழியாகச் செல்ல ஒரு வழி ஏற்படுத்த 'தர்ப்ப சயனம்' என்று அழைக்கப்படும் புல்லில் படுத்துக்கொண்டு ஸ்ரீராமர் பிரார்த்தனை செய்ததாக நம்பப்படுகிறது. ஸ்ரீராமரின் வேண்டுதலை ஏற்ற சமுத்திர ராஜன் கடலை நிதானமாகவும் தாழ்வாகவும் மாற்றிய பிறகு, இலங்கைக்கு ஒரு பாலம் கட்ட உதவியதாக வரலாறு உண்டு.

மற்றொரு புராணத்தின்படி, இந்த இடத்தில் உள்ள அரச மரத்தின் கீழ் ஸ்ரீராமர் புல்ல மகரிஷியை சந்தித்ததாகவும் இலங்கைக்கு தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, ஸ்ரீ ஆதி ஜெகந்நாதப் பெருமாளிடம் ஸ்ரீராமர் தனது பிரார்த்தனைகளை இந்த இடத்தில் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது. ஸ்ரீஆதி ஜெகந்நாதப் பெருமாள், ராவணனைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட வில்லை ஸ்ரீராமருக்கு வழங்கி அருள் புரிந்ததாகவும் வரலாறு.

சைவ திருத்தலத்தில் ஒரு வைணவ திவ்ய தேசம்: கள்வப்பெருமாள் தரிசனம்!

குறிப்பாக, ஸ்ரீராமரின் தந்தையான தசரத மன்னர் குழந்தைப் பேறு வேண்டி இங்கு யாகம் வளர்த்து பிரார்த்தனை செய்ததாக மற்றொரு புராணக் கதை உள்ளது. அவரது பிரார்த்தனைகளின் பலனாகவே அவருக்கு குழந்தைகள் பிறந்ததாக ஐதீகம். குழந்தை வரம் வேண்டி தசரதர் யாகம் வளர்த்த கோயில் என்பதால் 4 கி.மீ. தொலைவில் உள்ள சேதுக்கரையில் நீராடி விட்டு வந்து திருப்புல்லாணி பெருமாளை வணங்கி அங்கு தரப்படும் பாயசம் பிரசாதத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது காலங்காலமாக இருந்துவரும் நம்பிக்கை.

இக்கோயிலில் பிரதான தெய்வமாக தர்ப்ப சயன ராமர் அருள்பாலிக்கிறார். இறைவன் சாய்ந்த நிலையில் காட்சியளிப்பது இங்கு சிறப்பு. ஸ்ரீ ஆதி ஜெகந்நாதரின் துணைவியார் பத்மாசினி, ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகளும் உள்ளன. இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீகிருஷ்ணரின் உருவம், பாம்பின் மீது நடனமாடுவதை சித்தரிக்கிறது.

மேலும், பட்டாபிஷேக ராமர் தனிச் சன்னிதியில் அழகாக எழுந்தருளியுள்ளது தனிச்சிறப்பு. அரசியலில் உயர் பதவிகள் வேண்டுபவர்கள் தரிசனம் செய்தால் நினைத்தது நடக்கும் என்றும் நம்பப்படுகிறது. இக்கோயில் சென்று வழிபட்டால் பிள்ளைச்செல்வம், பதவி வேண்டுவோரின் நேர்மையான வேண்டுதல்கள் நிச்சயமாக நிறைவேறும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online