Dailyhunt
பிசிஓடி(PCOD) இருக்கா ? அப்ப இந்த பழங்களை சாப்பிடாதீர்கள்!

பிசிஓடி(PCOD) இருக்கா ? அப்ப இந்த பழங்களை சாப்பிடாதீர்கள்!

Kalki Online 1 year ago

பிசிஓடி(PCOD) பிரச்சனையால் பல பெண்கள் பாதிக்கப்பபட்டு வருகின்றனர். கருப்பையில் நீர்கட்டிகள் உருவாகுவதை பிசிஓடி என்பர்.

பொதுவாக ஹார்மோன் சமநிலையின்மை இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

பழங்கள் நம் அன்றாட வாழ்வில் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாய உணவு என்று கூட சொல்லலாம். பழங்களில் அதிகளவு ஆக்ஸிஜனேற்றங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை கிடைப்பதால் மருத்துவர்களும் பழங்களை பரிந்துரைக்கின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பழங்களை தினமும் சாப்பிடுவது அதிக நன்மைகளை தருகிறது.

பிசிஓடி(PCOD) இருப்பவர்களும் பழங்களை எடுத்துக் கொள்வது முக்கியமே; ஆனால் பிசிஓடி இருப்பவர்கள் சில பழங்களை தவிர்க்க வேண்டியது கட்டாயம். நாம் உண்ணும் பழங்களில் சில பழங்கள் நம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்து, பிசிஓடி பிரச்சனையையும் அதிகரிக்கும்.

எந்த பழங்கள் நம் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரித்து பிசிஓடி பிரச்சனையை அதிகரிக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்:

 Fruits

மாம்பழம்

பெரும்பாலும் அனைவரும் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுவர். ஆனால் அதன் அதிகப்படியான நுகர்வு PCOD உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில், மாம்பழத்தில் இயற்கை சர்க்கரை உள்ளதால், அதிகப்படியான மாம்பழங்களை சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும். இது இன்சுலினையும் அதிகரித்து, PCOD தொடர்பான பிரச்னைகளையும் அதிகரிக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜிஐ) மிக அதிகமாக உள்ளது. நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிட்டால், உங்கள் சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும். இன்சுலின் அதிகரிப்பு விரைவான எடை அதிகரிப்புக்கு வழிவகுத்து, உங்கள் PCOD தொடர்பான பிரச்னைகளையும் அதிகரிக்க செய்யும்.

திராட்சை

திராட்சை பழத்தில் இனிப்பு தன்மை அதிகமாக இருக்கும் என்பதால், அதிக அளவில் சாப்பிட்டால், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கரிக்கும். இதனால் உடல் எடை அதிகரித்து PCOD பிரச்சனையும் அதிகரிக்கும்.

தர்பூசணி

கோடைக்காலத்தில் தர்பூசணியை சாப்பிட அனைவரும் விரும்புவார்கள். ஆனால் தர்பூசணியை அதிகமாக சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து பிசிஓடி பிரச்னையையும் அதிகரிக்கும்.

உலர்ந்த பழங்கள்

உலர்ந்த பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நன்மை பயக்கும். ஆனால் பேரீச்சம்பழம், திராட்சை அல்லது அத்திப்பழங்களை அதிகமாக உட்கொண்டால், அது இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும். இது உடலில் கார்போஹைட்ரேட் மற்றும் ஃபைபர் உட்கொள்ளலை அதிகரிக்கிறது. அது இரத்த சர்க்கரை மற்றும் PCOD பிரச்னையை மேலும் அதிகரிக்க செய்யலாம்.

ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும் பொருட்களை தவறுதலாக கூட உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் எதைச் சாப்பிட்டாலும், அது உடலிற்கு ஏற்றதா என்று அறிந்துக்கொண்டு சாப்பிடுவது நல்லது. ஆரோக்கியமான எடையை பராமரித்து உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். ஏனெனில் உடற்பயிற்சி செய்வது ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவும்.

பிசிஓடிக்கு மருந்து எடுத்துக் கொண்டால், மருத்துவரின் ஆலோசனையின் படி உணவு முறைகளை கையாளுங்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online