Dailyhunt
பூஜையின்போது கடைசியில் சாமிக்கு கற்பூர ஆரத்தி காட்டுவது ஏன்?

பூஜையின்போது கடைசியில் சாமிக்கு கற்பூர ஆரத்தி காட்டுவது ஏன்?

Kalki Online 8 months ago

கோயில்களிலும் வீடுகளிலும் பூஜை செய்யும்போது கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்வது வழக்கமாக உள்ளது.

இந்த செயலுக்குப் பின்னால் உள்ள நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முதலாவதாக, உள் மனது இருள் நீங்கி வெளிச்சம் பரவட்டும் என்பதை இது மறைமுகமாக உணர்த்துகிறது என எடுத்துக்கொள்ளலாம். கற்பூரம் மிகவும் புனிதமான, மதிப்பிற்குரிய பொருளாகக் கருதப்படுகிறது. இதை நெருப்பு வைத்து எரியச் செய்யும்போது அது முழுவதுமாக எரிந்து, சாம்பல் போன்ற எதையும் மிச்சமாக வைப்பதில்லை. இது அதன் புனிதத்தின் வெளிப்பாடு எனலாம். கற்பூரம் எரிந்து நெருப்பாகவும் புகையாகவும் மாறிவிடுவது போல் பக்தர்கள் பக்தியில் கரைந்து, மனதிலும் இதயத்திலும் உள்ள எதிர்மறை எண்ணங்களையும், அசுத்தங்ளையும் நீக்கி புனிதமடைய வேண்டும், தூய, களங்கமற்ற, தெய்வீகமான உறவை கடவுளுடன் நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நம் ஆவலை கற்பூர ஆரத்தி பிரதிபலிக்கிறது.

விநாயகருக்கு முதன் முதலில் மோதகம் படைத்து, அவரது அருளைப் பெற்றது யார்?

நம் மனதில் உள்ள ஈகோ, சிற்றின்ப அவா மற்றும் உலகளாவிய பிணைப்புகள் போன்ற அத்தனை இச்சைகளும் கற்பூரம் கரைவது போல் கரைந்து நாம் ஒரு புதிய பிறவியாக உருமாற வேண்டுமென்று கற்பூரம் மறைமுகமாக உணர்த்துகிறது. சுயநலத்தோடு, பணம், பொருள், உடைமைகள் மற்றும் பொருள்சார் வசதிகள் நிறைந்த வாழ்வியலை பின்பற்றி வாழ்ந்து வரும் ஒருவர், அவை அனைத்தையும் துறந்து, வெளிச்சம் நிறைந்த ஞான மார்க்கத்தை நம்பிக்கையோடு கடைபிடிக்க வேண்டுமென்று கற்பூரம் நமக்கு போதிக்கிறது. பக்தர்கள் ஆன்மிக வளர்ச்சியும் தெளிவுற்ற மன நிலையும் பெற இந்த மாற்றம் அவசியம் எனவும் கற்பூர தீபம் உணர்த்துகிறது.

கற்பூர ஆர்த்தி காட்டும்போது வெளிவரும் கடுமையான, சுகந்த வாசனை அந்த இடத்தின் எதிர்மறை சக்திகளை வெளியேற்றவும், ஓர் அமைதியும் புனிதமும் நிறைந்த சூழலை அங்கு உருவாக்கவும் உதவுகிறது. இதன் மூலம் பக்தர்கள் கவனச் சிதறலின்றி, மனதையும் ஆன்மாவையும் ஒருங்கிணைத்து பிரார்த்தனை செய்ய முடிகிறது. மேலும், பக்தியின் அளவு அதிகரித்து தெய்வத்தின் அருளையும், உடல் வலிமையையும் உடனடியாகப் பெறவும் முடியும்.

கோயில் குளத்தில் வைக்கப்பட்ட பின்னமான லிங்கம்: குளத்து நீரையே சிவப்பு நிறமாக்கிய அதிசயம்!

இந்து மத சம்பிரதாயங்களில் கற்பூர ஆர்த்தி காட்டுவது மிக முக்கியமானதொன்று. கற்பூர ஒளி அதை ஏற்றுபவருக்கும் மற்றும் உலகத்தார் அனைவருக்கும் வாழ்வில் ஒளி கூட்டும். மேலும், ஆன்மாவிற்கு நம்பிக்கை அளித்து வழி காட்டவும் செய்யும். தெய்வீக சக்தியுடைய பகவான், அவர் மீது நம்பிக்கை கொண்ட பக்தர்களின் உள் மனதில் வெளிச்சமாக உறைகின்றார்.

கற்பூர தீபத்தை காணும் ஒவ்வொருவருக்கும், அவர்களும் கற்பூரம் ஏற்றி, ஈகோ, பொறாமை, தற்பெருமை போன்ற மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை நீக்க வேண்டுமென அந்த தீபம் நினைவூட்டுகிறது. ஆரத்தி காட்டும் செயலில், கற்பூரம் ஓர் ஒருங்கிணைந்த பாகமாக இருந்து, ஆன்மிக வளர்ச்சிக்கு உள் மன சுத்தமும் அர்ப்பணிப்பும் அவசியம் என்பதை உணர்த்துகிறது. துறவியின் மனோபாவம் கொண்டு, பணிவுடனும், நம்பிக்கையோடும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் கற்பூரம் கற்றுத் தருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online