சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்ட நிலையில், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்பி.வேலுமணி தலைமையில் சில எம்எல்ஏ-க்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்தனர்.
இந்நிலையில் நேற்று (மே 25) மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா ஆகிய மூவரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில்இணைந்தனர்.
இந்நிலையில் சற்றுமுன் அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைந்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சட்டசபையில் அதிமுகவின் பலம் 43 ஆக குறைந்துள்ளது.
ஏற்கனவே திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை மற்றும் தாராபுரம் உள்ளிட்ட 4 தொகுதிகள் காலியாக இருப்பதாக அரசிதழில் வெளியாகி உள்ளது. அதோடு 4 தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் சபாநாயகர் ஜேசிடி.பிரபாகரன் முறைப்படி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அம்பாசமுத்திரம் எம்எல்ஏவும் ராஜினாமா செய்திருப்பதால், தற்போது தமிழக சட்ட மன்றத்தில் 5 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இந்நிலையில் காலியாக உள்ள 5 தொகுதிகளிலும் விரைவில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவைப் பொறுத்தவரை தென்மாவட்டங்களை மிக முக்கிய நிர்வாகியாக இசக்கி சுப்பையா இருந்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2011 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களிலும் இசக்கி சுப்பையா அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார். குறிப்பாக 2011ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டத்துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்குப் பிறகு எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்தார் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா. தவெக-வுக்கு ஆதரவளித்த பிறகு வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாத நிலையில், மீண்டும் இபிஎஸ் உடன் இணைய அவர்கள் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் இபிஎஸ்-க்கு எதிராக செயல்பட்ட பிறகு, தற்போது மீண்டும் அவருடன் இணைய இசக்கி சுப்பையா மறுத்துவிட்டார். இதன் காரணமாகவே தற்போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைந்துள்ளார். மேலும் சில எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாத அதிமுக, பிளவு பட்டிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு எவ்வித நல்லதையும் செய்ய முடியாத சூழலில் எம்எல்ஏவாக இருப்பதில் அர்த்தமே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தவெக குதிரை பேரும் நடத்தி அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுப்பதாக திமுக மற்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நேற்று ராஜினாமா செய்த மூன்று எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை உடனடியாக சபாநாயகர் ஏற்றது ஏன் எனவும் இபிஎஸ் தரப்பினர் கேள்வி கேட்டுள்ளனர. இது தவிர 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் மீது சபாநாயகர் இடம் கட்சி தாவல் புகாரும் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபாநாயகர் 3 எம்எல்ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுஒருபுறம் இருக்க இபிஎஸ் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் ஒன்றிணைவார்களா என்ற எதிர்பார்ப்பும் தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் என்.ஆனந்த் ஆகியோரை சந்தித்து தவெக-வில் இணைந்தார் இசக்கி சுப்பையா.

